உணவு விநியோக செயலிகளுக்கு மாற்று
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போதும், இரண்டாவது அலையின்போதும் அதிக அளவில் பாதிக்கப்பட்டது உணவு தொழில்தான். குறிப்பாக ரெஸ்டாரெண்ட்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றதால் ரெஸ்டாரெண்ட்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொழில் இருப்பு நிலை
கொரோனா பெருந்தொற்று காரணமாக பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான ரெஸ்டாரெண்ட்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து விட்டன. தொழில் முற்றிலும் முடங்கி விடக் கூடாது என்ற எண்ணத்தில் லாபநோக்கில் இல்லாவிட்டாலும், தொழிலின் இருப்பு நிலையைக் கருத்தில் கொண்டு சில ரெஸ்டாரெண்ட்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன.
இதையும் படியுங்கள்: நெல்லை இருட்டுக்கடை அல்வா…
மூடப்பட்ட உணவகங்கள்
சென்னையை எடுத்துக் கொண்டால், சரவணபவன் சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட் நிறுவனம் தங்களது சில கிளைகளை மூடிவிட்டு, சில கிளைகளை மட்டுமே தொடர்ந்து நடத்தி வருகிறது. மூடிய கிளைகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படவில்லை. உதாரணத்துக்கு அண்ணா சாலையில், அண்ணா சாலையை ஒட்டிய பகுதிகளில் சரவண பவனுக்கு மூன்று ரெஸ்டாரண்ட்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மூடப்பட்டுள்ளன. ஆயிரம் விளக்கில் இருந்த உணவகமும், ஸ்பென்ஷர் பிளாசாவில் இருந்த உணவகவமும் மூடப்பட்டுள்ளன. அண்ணாசாலையில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரே உள்ள சரவணபவன் உணவகம் மட்டும் இப்போது செயல்படுகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூன்று உணவகங்களில் இரண்டு மூடப்பட்டுள்ளன. ஒன்று மட்டுமே செயல்படுகிறது. ஒரு சில உணவகங்கள் முற்றிலும் மூடப்பட்டு விட்டன.
பார்சலால் விலை அதிகரிப்பு
ஊரடங்கு காலத்தில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்பட்டன. சரவணபவன், சங்கீதா பவன் போன்ற பெரிய உணவகங்கள் மட்டும் தங்களது ஊழியர்களைக் கொண்டு நேரடிடெலிவரியிலும் ஈடுபட்டன. மற்ற பெரும்பாலான உணவகங்கள் ஸ்விக்கி, ஜொமோட்டோ, ஊபர் ஈட் போன்ற உணவு விநியோக செயலிகள் வழியாக பார்சல் சேவையை மேற்கொண்டன. இதனால் உணவின் விலையானது சாதாரண நாட்களைவிடவும் ஊரடங்கு காலத்தில் 40 சதவிகிதம் வரை கட்டணம் அதிகரித்தது.
இதையும்படியுங்கள் :ஜொமோட்டோ ஊழியருக்கு பைக் வாங்க பணம் திரட்டிய நெட்டிசன்கள்
இதனால் வாடிக்கையாளர்கள்களிடையே உணவு செயலிகளின் வழியே உணவு ஆர்டர் செய்யும் எண்ணிக்கையும் குறைந்தது. ரெஸ்டாரெண்ட்கள் நஷ்டத்தையே சந்திக்க நேர்ந்துள்ளது. பார்சல் சேவைக்காக வசூலிக்கப்படும் கூடுதல் தொகையில் பெரும் பங்கு உணவு செயலிகளுக்கே தரும் வகையில் இருந்ததால் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள் வேறு வழியின்றியே அந்த செயலிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. எனினும் வேறு மாற்று வழி வராதா என்றே பல ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
மாற்று வழியைத் தேடு உணவகங்கள்
இந்த நிலையில்தான் இந்தியாவில் DotPe என்ற இணையதளம் ஒன்று குறைந்த தொகையில் உணவக ஆர்டர்களை நிர்வகித்து, வாடிக்கையாளர்களிடம் விநியோகிக்கும் முறையைத் தொடங்கி இருக்கின்றனர். இந்த இணையதளத்தில் இப்போது, மெக்டெனால்ட், ஹால்டிராம்ஸ் போன்ற சில பிரபல பிராண்ட்கள் மட்டும் இணைந்திருக்கின்றன. விரைவில் மேலும் பல ரெஸ்டாரெண்ட்களும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ரெஸ்டாரெண்ட் அசோஷியேசன் இந்தியா சார்பில் அண்மையில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. #OrderDirect என்ற இந்த இயக்கம் வாயிலாக உணவு செயலியின் வாயிலாக நடைபெறும் ஆர்டர்களை குறைத்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வது இதன் நோக்கமாகும். இதனால், ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள்தாங்களே நேரடியாக டெலிவரி செய்வதை அதிகரிக்க வேண்டும் என்றும், உணவு செயலிக்கு மாற்றாக உள்ள தளங்களை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள டப்பா வாலாக்கள் போல மேலும் பல நகரங்களில் உள்ளூர் மக்களைக்கொண்டு உணவுகளை விநியோகிக்கும் வாய்ப்புகள் குறித்தும் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
-பா.கனீஸ்வரி
#OrderDirect #AlternateOfFoodDelivaryAPPS #Swiggy #Zomato
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Comments
View More