சின்ன மெஸ். பெரிய மனஸ்…எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அனுபவ பகிர்வு…
கோவை தொண்டாமுத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த என்னுடைய நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். ராத்திரி எட்டு மணி இருக்கும்.நண்பரோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை .
மணி 9.30 ஆகிவிட்டது . வீட்டுக்கு சென்று இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.ஆனால் வயிறு பசியோடு அடம் பிடித்தது.
அதிகமாக பசிக்கவே ஹாஸ்பிடலை விட்டு சற்று தூரத்தில் இருந்த ஒரு சிறிய மெஸ் பார்வைக்குத் தட்டுப்பட அதை நோக்கி நடந்தேன். (இருட்டில் இருந்த அந்த சிறிய மெஸ் போர்டை படிக்க முடியவில்லை. ANP hospital அருகில்.) உள்ளே போனேன்.
மெஸ்ஸை கணவன் மனைவி இருவரும்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்பதை உடனே புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு ஐந்து மேஜைகள் போடப்பட்டு ஒரு 15 பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு தான் அந்த மெஸ் இருந்தது. அந்த நேரத்தில் கூட்டமும் இல்லை.

ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நான் யாரென்று அந்த கணவன்,மனைவிக்கு தெரிய வாய்ப்பில்லை. எனக்கு முன்னால் தலைவாழையிலையொன்றை போட்டப்படி அவர் புன்னகையுடன் கேட்டார்.
" என்ன ஸார் சாப்பிடறீங்க?"
"ரெண்டு இட்லி"
" இட்லி முடிஞ்சுடுச்சே....தோசை,ஆப்பம், சப்பாத்தி இருக்கு"
" சரி....ஒரு தோசை" என்றேன்.
டுத்த சில நிமிடங்களில் தோசை ஒரு அடி நீளத்திற்கு முறுகலாக வந்தது.
சட்னி,சாம்பார், காரச்சட்னி காம்பினேஷனில் தோசை சூப்பர் டேஸ்ட்.
இன்னொரு தோசைக்கு என்னையும் அறியாமல் ஆர்டர் போயிற்று.
இரண்டாவது தோசை படு ஸமார்ட்டாய் வர, முன்னதை விட இரண்டாவது தோசைக்கு என்னுடைய வயிறு முதல் பரிசு கொடுத்தது.
மூன்றாவது தோசைக்கு ஆர்டர் கொடுக்க கொஞ்சம் கூச்சமாக இருந்தால்
"ஒருஆப்பம் " என்றேன். அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு ஆப்பம் மெத்து மெத்தென்று வாட்டசாட்டமாக வந்து மேஜையில் உட்கார்ந்து புகை விட்டது.
சாப்பிட்டேன்.
ஆஹா.......
இரண்டு தோசைக்கு பதிலாக ஆப்பமே சாப்பிட்டு இருக்கலாமே என்று என்
மூளையிடம் திட்டு வாங்கிக்கொண்டு தோசைக்கு கொடுத்த முதலிடத்தை அதற்கே தெரியாமல் பறித்துக் கொண்டேன். ஆப்பம் உள்ளே போனதும், பசி பறந்து போயிருக்க ,வயிறு "தேங்க்ஸ் ஏ லாட் " என்று சொல்லியது.
சாப்பிட்டு முடித்ததும் " பில் எவ்வளவு ?" என்று அவரிடம்
கேட்டேன்.
" 45 ரூபாய் " என்றார்.
நான் நம்பமுடியாமல் மறுபடியும் " எவ்வளவு?" என்று கேட்டேன்.
"ரெண்டு தோசை முப்பது ருபா. ஆப்பம் பதினஞ்சு ரூபா.
மொத்தம் நாற்பத்தஞ்சு " என்றார்.
சின்ன மெஸ். பெரிய மனஸ்.
மெஸ்ஸின் பெயர் விருதா மெஸ்.
-நன்றி திரு.ராஜேஷ்குமார் அவர்களின் முகநூல் பதிவு
#WriterRajeshKumar #VirudaMess #RajeshKumar
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்

Comments
View More