
வெரைட்டியா விலை மலிவா, ருசியா சாப்பிடனும்னா குரோம்பேட்டை உப்பிலி பவனை மறந்துடாதிங்க
வீட்டு முறை உணவகங்கள் என்ற அறிவிப்போடு இயங்கும் உணவகங்கள் அனைத்தையும் வீட்டு முறை உணவகங்கள் என்று சொல்லிவிட முடியாது. சென்னையில் இது போன்ற அடைமொழியுடன் நூற்றுகணக்கான உணவகங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றின் சுவை வீட்டில் சமைக்கப்படுவது போன்று இருப்பதில்லை. உண்மையிலேயே வீட்டு முறை உணவகங்களை சமைத்து வழங்குபவர்கள் சென்னையில் மிக மிக குறைவு. அந்த சிலவற்றில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள உப்பிலி பவன் இடம் பிடித்திருக்கிறது. ஆம், இந்த வீட்டு முறை உணவகத்தை வீட்டில் வைத்து பாலாஜி பிரியா தம்பதியினர் நடத்தி வருகின்றனர்.
ரெஸ்டாரெண்ட் பெயர், உணவோ வீட்டு உணவு
பெயர் என்னவோ பார்ப்பதற்கு ஒரு பெரிய ரெஸ்டாரெண்ட் போல தோன்றும். ஆனால், உண்மையில் உப்பிலி பவன் வீட்டில் செயல்படுகிறது. இங்கு சமைக்கப்படும் உணவுகள் ஒவ்வொன்றும் வீட்டில் சமைக்கப்படுவது போல மிகுந்த அக்கறையுடன் சமைக்கபடுகின்றன. விலையும் மிகமிக குறைவு. இரண்டு இட்லி சாப்பிட15 ரூபாய் இருந்தால் போதும். அதிகபட்சமாக தோசை வெரைட்டிகள் மட்டும் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
எப்படி இந்த உணவகத்தொழிலுக்கு வந்தீர்கள் என்று பாலாஜியிடம் கேட்டோம். அதற்கு அவர், “என் தந்தை சிறுவயதில் தஞ்சாவூரில் ஒரு உணவகம் நடத்தி வந்தார். எனவே, நான் சிறுவனாக இருக்கும்போதே உணவின் மீது ஆர்வமும், உணவு சமைப்பதில் ஈடுபாடும் ஏற்பட்டது.
பின்னாளில் சிங்கப்பூரில் வேலைக்குச் சென்றபோது உணவு சமைக்கும் திறன் எனக்கு கைகொடுத்த து. அங்கு ஒரு உணவகத்தில் சமையலராகப் பணியாற்றினேன். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஊர் திரும்பினேன். பின்னர் சென்னையிலேயே நானும் என் மனைவியும் தனித்தனி நிறுவனங்களில் வேலை பார்த்தோம்.
தெரிந்தது உணவு தொழில் மட்டும்தான்
நாங்கள் வேலைக்குச் செல்லும்போது குழந்தைகள் தனிமையில் இருக்கப் பயந்து அழுதனர். எனவே இரண்டு பேரும் வேலையை விட்டு விட்டு, ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டோம். எனக்குத் தெரிந்த உணவு தொழில்தான் நினைவுக்கு வநத்து.
நான் அனைத்து உணவுகளையும் சுவையாக செய்வதில் கைதேர்ந்தவன். அதேபோல என் மனைவி குழம்பு, சாம்பார், காய்கறிகள் போன்ற சைட்டிஷ்கள் சமைப்பதில் கில்லாடியாக இருந்தார். எனவே முக்கியான டிஷ்களை எல்லாம் நான் செய்வது என்றும், குழம்பு, காய்கறி வகைகளை என் மனைவி செய்வது என்றும் திட்டமிட்டோம். நாங்கள் இருந்த வீட்டிலேயே உணவகத்தை ஆரம்பித்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2019ம் ஆண்டு இந்த உப்பிலி பவனை ஆரம்பித்தோம்.
தரத்தில் உறுதி
தொடக்கத்தில் இருந்தே தரமான உணவு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதே நேரத்தில் விலையும் அதிகம் இருக்கக் கூடாது என்பதையும் திட்டவட்டமாக அறிந்தோம்.
ஆரம்பத்தில் தயக்கம் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகம் வரவில்லை. பின்னர் வாய்மொழி விளம்பரங்களால், எங்கள் உணவகத்தை நாடி வருபவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவகம் என்பதாக எங்கள் உணவகம் மாறி விட்டது. வயது முதிர்ந்தவர்கள் இங்கு வந்து சாப்பிட முடியாத போது டோர் டெலிவரி கொடுக்கின்றோம். இப்போதைக்கு காலை, மாலை இரண்டு வேளை மட்டும் உணவகம் செயல்படுகிறது. யாராவது வேண்டும் என்று கேட்டால் மதிய உணவு சமைத்துக் கொடுப்போம். விழாக்கள், குடும்ப நிகழ்வுகளுக்கு கேட்டரிங் செய்து தருகின்றோம். தொடர்ந்து இதுபோல தரமான ருசியான உணவை, ஏற்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றோம்,” என்று பாலாஜி கூறினார். இந்த உப்பிலி பவன் உணவகம், 2வது குறுக்குத் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, குரோம்பேட்டை, சென்னையில் இயங்கி வருகிறது. 9791004367 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-பா.கனீஸ்வரி
#HomelyFood #TiffinVariety #LowPriceFood #UppiliBhavan #TamilFoodNews
Comments