
உணவை குப்பையில் போடாதீர்கள், பசித்தவர்கள் கையில் கொடுங்கள்
உலகில் 70 கோடி பேர் தினமும் பட்டினியோடு இருக்க ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 121 கிலோ உணவை வீணாக்குகின்றோம் என்பது ஒரு சாதாரண தகவல் போல தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் பசியும், அலட்சியமும் கவலைதரத்தக்கவை.
உலகம் முழுவதும் தினமும் 70 கோடிப்பேர் இரவு உணவு உண்ணாமல் பசியோடுஉறங்கச் செல்கின்றனர் என ஐநா சபையின் சாராசரி மதிப்பீடு கூறுகிறது. இந்த 70 கோடிப்பேரில் நம் அண்டைவீட்டார், நம் தெருவில் இருப்போர், நம் தாலுகாவில், நம்மாவட்டத்தில் இருப்போர் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒருபுறம் 70 கோடி பேர் பசியோடு உறங்க செல்லும் வேளையில்தான் இந்த உலகில் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 சதவிகிதம் உணவு வீணாக குப்பையில் கொட்டப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உணவு வீணாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று கழிவு மற்றும் வளங்கள் செயல் திட்டத்தின் வளர்ச்சி இயக்குனர் ரிச்சர்ட் ஸ்வானெல் கூறி உள்ளார். இது சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் அனைத்துக்கும் செலவு பிடிக்கும் விவகாரம் என்றும் அவர் கவலைப்படுகிறார். இப்படி உலகம் முழுவதும் வீணாகும் உணவுகளை பார்சலாக கட்டி 40 டன் கண்டய்னர் லாரிகளில் வைத்து உலகம் முழுவதும் சுற்றி வந்தால் அது உலகத்தை ஏழுமுறை சுற்றி வரும் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
உணவு வீணாவது என்பது பணக்கார நாடுகளின் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இது அனைத்து உலக நாடுகளுக்குமான பிரச்னை.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நபரும் 121 கிலோ உணவை வீணாக்குகின்றோம். இதில் பாதி அளவு அதாவது 71 கிலோ உணவு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வீணாக தூக்கி எறியப்படுகிறது.
உணவு வீணாவதற்கு எதிராக பணக்கார நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இங்கிலாந்தில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் உணவு வீணாவது 31 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உணவு வீணாவது குறித்து முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள ஐநா உலக உணவு முறை மாநாட்டில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் விவாதிக்கப்பட உள்ளது.
பா.கனீஸ்வரி
#DoNotWasteFood #GiveFoodHungry #GiveFoodNeedy
Comments