பப்ஸ் பர்கர் பிஸ்கட் பரோட்டா ஆகியவற்றை காட்டிலும் முட்டை நல்லது…


முட்டையில் ஆண்டிபயாடிக் இருக்கிறது என்று மூத்த மருத்துவர் கூறும் வீடியோ  இருக்கிறது. கூடவே அவர் க்ரோத் ஹார்மோன்களும்  அதில் இருக்கும் என்று கூறி முட்டைகள் உண்ணக்கூடாதவை என்று எச்சரிக்கிறார்
முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் கறி என்பது ப்ராய்லர் கோழியிடம் இருந்து வருவது. நாம் உண்ணும் முட்டை என்பது லேயர் கோழிகளிடம் இருந்து வருவது. இரண்டும் ஒன்றல்ல. இதை முதலில் புரிந்து கொள்ளவும். ப்ராய்லர் கோழிகள் முட்டை போடாது
அவை இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. அந்த ப்ராய்லர் இனமானது மரபணு ஒட்டுசேர்ப்பு செய்யப்பட்டு குறைவான நாட்களில் கொழு கொழுவென்று வளர்வது போல மாற்றம் செய்யப்பட்டதாகும்
அவை கொழு கொழுவென்று வளர்வதற்கு நல்ல சீதோஷ்ண நிலை , கூடவே நோய் தாக்காமல் பார்த்துக் கொள்வது , பிறகு  தீவனம் தண்ணீர் கொடுப்பது  இவற்றை செய்தாலே ஏழு முதல் எட்டு வாரங்களில் இறைச்சி கொள்முதலுக்கு தயாராகிவிடும். இதற்கு க்ரோத் ஹார்மோன் எல்லாம் ஒவ்வொரு கோழியாக பிடித்துப் போடப்படுவதில்லை. காரணம் இப்படி ஒவ்வொரு கோழிக்கும் க்ரோத் ஹார்மோன்  போட்டால் அதற்குரிய மகசூலில் லாபம் வராது
மேலும் ஒரு உடல் வளர க்ரோத் ஹார்மோன் மட்டும் பத்தாது கூடவே இன்சுலினும் போட வேண்டும். இப்படி இன்சுலினும் சேர்த்துப் போட்டால் பல கோழிகள் ரத்த க்ளூகோஸ் அளவுகள் அபாயகரமான அளவு குறைந்து செத்துப் போகும். பலவற்றில் வலிப்பு ஏற்பட்டு செத்துப் போகும். எனவே ப்ராய்லர் கோழிகளுக்கு க்ரோத் ஹார்மோன் போடப்படுவது உண்மையன்று
ப்ராய்லர் மற்றும் லேயர் கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுவதால்,ஒரு கோழிக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அனைத்து கோழிகளுக்கும் பரவி உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றிற்கு தடுப்பூசிகள் வழங்கப்படும். இவை பெரும்பாலும் மூன்று வாரங்களுக்குள் தடுப்பூசிகளும்
இறைச்சிக்கு கொள்முதல் செய்யப்படுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே ஆண்டிபயாடிக்குகள் போடப்பட்டு  அந்த கோழிகளில் உடலில் ஆண்டிபயாடிக்குகள் வடிந்து மறைவதற்கு ஒரு வாரம் ஒதுக்கப்பட்டே பெரும்பாலும் நம்மை எட்டாவது வாரம் ஒன்பதாவது வாரம் வந்தடைகின்றன
லேயர் கோழிகளைப் பொருத்தவரை அவற்றின் முட்டை இடும் காலம் 72 வாரம் . 19 முதல் 21 வாரத்தில்  இருந்து முட்டை இட ஆரம்பிக்கும். பண்ணைகளில் சளி போன்ற தொற்று பரவல் இருந்தால்  ஆண்டிபயாடிக்குகள் உபயோகிக்கப்படும்.
இப்படி உபயோகிக்கப்படும் ஆண்டிபயாடிக்குகளின் எச்சம் முட்டைகளில் மிக மிகக் குறைவான அளவு இருக்கும் வாய்ப்பு உள்ளது ஆனால் இத்தகைய  சிறய அளவு ஆண்டிபயாடிக் எச்சங்களுக்கு அஞ்சி முட்டைகளைப் புறக்கணிப்பது அறிவுக்கு புறம்பானதாகும்
காரணம் இவ்வுலகில் நாம் ஒவ்வொரு விசயத்தையும்  ரிஸ்க் Vs பெனஃபிட் தத்துவத்தின் படி பெனஃபிட் அதிகமாக இருந்தால் குறைவான ரிஸ்க்கை நாம் எடுக்கத் தயங்குவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இத்தகைய சிறிய ரிஸ்க்குகளை எடுத்து பலன்களை அனுபவித்ததால் தான் நாம் மனித சமுதாயமாக பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம்
சிறு சிறு உதாரணங்கள் கூறுகிறேன்
நாம் உண்ணும் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் , கீரைகள் போன்றவற்றில் அவற்றை திறம்பட வளர்க்க உதவிய ரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லிகளின் எச்சங்கள் கொஞ்சூண்டு இருக்கத்தான் செய்கின்றன ஆனால் காய்கறிகள் , பழங்கள் , கீரைகள் , தானியங்கள் போன்றவற்றை அவை தரும் நன்மைக்காக நாம் உண்டு பஞ்சம் பட்டினி இல்லாமல் உயிர் வாழ்கிறோம்
அடுத்து வாகனங்கள் உபயோகத்திற்கு வருவோம் நம் அனைவருக்கும் தெரியும் இரு சக்கர வாகனம் முதல் விமானம் வரை அனைத்திற்கும் நாம் ஹைட்ரோகார்பன் கூறுகளை எரித்து அதனால் உண்டான சக்தியைக் கொண்டே பயணங்கள் செய்து வருகிறோம் ஹைட்ரோ கார்பனை எரிப்பதால் தொடர்ந்து காற்று மாசடைகிறது அதனால் கார்பன் துகள்கள் காற்றில் கலக்கின்றன அவற்றை சுவாசிப்பதால் புற்று நோய் வரை ஏற்படும் அரிதான வாய்ப்பு உண்டு என்பது தெரிந்தும் நாம் விரைவாக முன்னேறிச் செல்ல அந்த ரிஸ்க்கை எடுக்கவும்  தயங்குவதில்லை
இது போன்று பல பல உதாரணங்களைக் கூறலாம். அது போலத்தான் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு  போன்றவற்றில்  தடுப்பூசி உபயோகம் ஆண்டிபயாடிக் உபயோகம் தேவையுள்ளதாக இருக்கிறது. இத்தகைய ஆண்டிபயாடிக் உபயோகங்கள் குறித்த விழிப்புணர்வு சரியான வழிகாட்டு நெறிமுறைகளும் வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை
ஆனால் இந்த காரணங்களுக்காகவே முட்டை திண்ணக்கூடாது ப்ராய்லர் திண்ணக் கூடாது என்று கூறுவது அபத்தமாகும் முட்டை மற்றும் கோழி மாமிசம் இரண்டும் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பாரபட்சமின்றி உண்ண முடிந்த  புரதச்சத்தும் பல்வேறு ஊட்டச்சத்தும் நிறைந்த உணவுகளாகும்
தமிழ்நாடு அரசு காரணத்துடனே ஆராய்ச்சிகளின் முடிவின் படியே வாரம் ஐந்து நாட்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவியருக்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் முட்டைகளை வழங்கிவருகிறது 
தங்களின் குழந்தைகளுக்கு பப்ஸ் பர்கர் பிஸ்கட் பரோட்டா சாக்லேட் போன்ற விசயங்களைக் கொடுப்பதை காட்டிலும் ஒரு ஆம்லெட் கொடுப்பது சிறந்தது இதைப் புரிந்து கொண்டால் சிறப்பு


-டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை


Comments


View More

Leave a Comments