#WorldBreastfeedingWeek தாய்பாலுக்கு மாறாக வேறொன்றை முயற்சிப்பது நல்லதல்ல...


குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு இருக்கும் முக்கிய கவலை மற்றும் கேள்விகள்

தனக்கு தாய்ப்பால் சரியாக சுரக்குமா? , சுரக்கிறதா?

குழந்தையை ஈன்ற அன்னைகளுக்கு தாய்ப்பால் சரியாக உற்பத்தி ஆகும் .

மேலும் குழந்தையை ஈன்றவுடனே தாய்ப்பால் ஊற்றெடுத்து சுரக்க ஆரம்பிக்கும். குழந்தை பிறந்தவுடனேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் அதற்கு தாய்ப்பால் கிடைக்கச் செய்ய வேண்டும்.

எடுக்க எடுக்க ஊறும் கிணறு போல குழந்தை உறிஞ்சிப் பருகப் பருக தாய்ப்பால் ஊற்றெடுக்கும். எனவே தாய்ப்பால் சரியாக சுரப்பதற்கு குழந்தை வாய் வைத்து உறிஞ்சிப் பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.

Must Read:  பெங்களூருவில் நல்ல தரமான வெஜ் டிபன் எங்கு சாப்பிடலாம் தெரியுமா?

பெரும்பாலும் முறையான நிலைப்படுத்துதல் POSITIONING & ஒட்டுதல் ATTACHMENT  இல்லாததால் குழந்தை தாய்ப்பால் பருகுவுதில் சுணக்கம் ஏற்படுகிறது.

குழந்தையை எப்படி அணைத்து வைத்துக்கொள்வது??

இதை positioning என்போம்

1. குழந்தையின் உடல் நேர் கோட்டில் இருக்குமாறு கைகளைக் கொண்டு தாங்கிப்பிடிக்க வேண்டும்

2. குழந்தையின் தாடை மார்போடு ஒட்டியிருக்க வேண்டும்

3. குழந்தையின் மூக்கு மார்பை விட்டும் தள்ளியிருக்க வேண்டும்

4. குழந்தையின் உடல் முழுவதும் தாயின் உடல் பக்கம் பார்த்து இருக்க வேண்டும்

5. தாய்ப்பால் கொடுக்கையில் தாய் தன் குழந்தையை பார்த்தவாறு இருக்க வேண்டும்

அடுத்து தாய்ப்பாலை கொடுக்கும் போது தன் குழந்தை மார்போடு வைக்க வேண்டிய ஒட்டுதல் நிலையை Attachment என்போம்

1.குழந்தை பால் பருகும் போது அதன் கவாய் நன்றாக திறந்து இருக்க வேண்டும்

2.குழந்தை பால் பருகும் பொழுது தாயின் முளைக்கு மேல் பகுதி மட்டுமே சிறிது தெரியவேண்டும்

3.குழந்தையின் தாடை பகுதி மார்போடு ஒட்டி அழுத்திக்கொண்டிருக்க வேண்டும்

தாய்பால் கொடுப்பதன் அவசியம்

தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பால் புகட்டுகையில் இந்த positioning மற்றும் attachment ஐ சரி செய்யுங்கள்

பால் நன்றாக சுரக்கும் குழந்தை மகிழ்ச்சியாக பால் பருகும். குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் தாயும் மகிழ்ச்சியாக இருப்பாள். தனது குழந்தை தேவையான அளவு பாலை தன்னிடம் இருந்து பருகுகிறதா? தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறதே.. ஒரு வேளை பால் சரியாக கிடைக்கவில்லையோ?

அம்மாவும் மாமியாரும் கூறுவது போல பசும்பாலையோ பவுடர் பாலையோ கலந்து கொடுத்துவிடலாமா? அவர்கள் காலத்தில் பால் சரியாக கிடைக்கவில்லையென்றால் பசும்பால் கொடுத்தார்களாமே.. நாமும் அப்படியே செய்து விட்டால் என்ன?

குழந்தை பிறந்தவுடன் அதற்கு வாயில் தேன் சீனி தண்ணி போன்றவற்றை வைப்பது பாரம்பரியம் என்கிறார்களே?

Must Read: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பேருயிர்களுக்காக ஒரு நாள் பயணம்…

குழந்தை தாயிடம் இருந்து சரியான அளவில் பால் பருகுவதை அந்த குழந்தை சரியான முறையில் சிறுநீர் கழிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தாய்ப்பாலில் 90% நீர் இருக்கிறது . எனவே வெயில் காலங்களில் கூட சரியான முறையில் தாய்ப்பால் புகட்டினால் போதுமானது. வெளியில் இருந்து நீர் கூட கொடுக்கத் தேவையில்லை.

சிறுநீர் அடிக்கடி கழிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்றே அர்த்தம். முந்தைய காலத்தில் சீனி , தேன், மூலிகைகள் போன்றவற்றை பிறந்த குழந்தைகளுக்கு கொடுத்து அதனால் அபாயகரமான தொற்றுகள் ஏற்பட்டு சிசு மரணங்கள் அதிகமாக ஏற்பட்டு வந்தன.

சிசுக்களின் ஜீரண மண்டலத்தால் எளிதில் செரிமானம் செய்ய முடியாத பசும்பாலைக் கொடுப்பதால் தீவிர தொற்று நிலை ஏற்பட்டு குழந்தைகள் இறந்து வந்தனர். இப்போது இத்தகைய காரியங்களை செய்யும் இடங்களில் சிசு மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.

சிசு பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அன்றி வேறெந்த உணவும் கொடுக்கக் கூடாது. ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே முழு உணவாக வழங்க வேண்டும்.

குழந்தை அழுவது அனைத்தையும் தாய்ப்பாலோடு தொடர்பு படுத்துவது தவறு குழந்தைக்கு தெரிந்த ஒரே மொழி "அழுகை" மட்டுமே. சிறுநீர் கழித்தாலும் சிறு அழுகை. மலம் சென்றாலோ காற்று வெளியேறினாலோ அதற்கும் அழுகை

வயிறு வலித்தாலும் அழுகை , தூக்கம் வந்தாலும் அழுகை ,வராவிட்டாலும் அழுகை , கொசு கடித்தாலும் அழுகை, அன்னையின் கதகதப்பு தேவைப்பட்டாலும் அழுகை , கெட்ட கனவு கண்டாலும் அழுகை என அழுகைக்கான பல காரணங்கள் இருப்பதால் தாயானவள் அனைத்துக்கும் தான் தாய்ப்பால் கொடுக்க இயலாமல் இருப்பது தான் காரணம் என்று நினைக்க வேண்டியதில்லை

மாமியார்களும் அம்மாக்களும் பாட்டிகளும் இக்கால தலைமுறை அன்னைகள் மீது அழுத்தம் தரவும் வேண்டியதில்லை. குழந்தைக்கு அதன் மருத்துவரிடம் சென்று காட்டி அவர் தேவைப்பட்டால் தரும் மருந்துகள் அன்றி வேறெதையும் கொடுத்தால் அதனால் நேரும் பாதிப்புகளுக்கு அதன் தாய்மார்களும் தந்தைமார்களும் மட்டுமே பொறுப்பு.

மாமியார் மாமனார் சொன்னார், பாட்டி தாத்தா சொன்னார், அம்மா சொன்னார், எதிர்த்த வீட்டு ஆண்ட்டி சொன்னார்  என்று உங்கள் குழந்தைகளை வைத்து விபரீத விளையாட்டுகளை விளையாடக்கூடாது என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

இன்றும் பிறந்த குழந்தைகளுக்கு  வசம்பு கொடுப்பது மூலிகை தண்ணீர் வாயில் ஊற்றுவது சீனித் தண்ணீர் கொடுப்பது மாட்டுப்பால்  கொடுப்பது போன்ற தீய பழக்க வழக்கங்கள் தொடர்கின்றன

உயர்கல்வி வரை பயின்ற தாய் தந்தையரும் இதை சரி செய்ய முயற்சிகள் எடுப்பதில்லை இது குழந்தையின் உயிரையே போக்கும் செயலாக மாறிவிடும் என்பதையும் இங்கு அடிக்கோடிட விரும்புகிறேன். குழந்தைக்கு ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும்.

-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர் , சிவகங்கை

#WorldBreastfeedingWeek2023 #Breastfeeding #howtogivebreastfeeding

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments