அதிக இனிப்பு அதிக ஃப்ரக்டோஸ் உணவுகளை உண்டால் ஆபத்து ஏன் தெரியுமா?


சகோதரர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன் .அவர் ரத்த முழு பரிசோதனை செய்து என்னிடம் காட்ட வந்தார் அவ்வப்போது சில மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறு சுயமாக பரிசோதனை செய்து என்னை சந்திப்பார் . அவரது ட்ரைக்ளிசரைடு அளவுகள் கூடியிருந்ததையும்  பிலிருபின் ( பித்த நீர் உப்பு) கூடியிருந்ததையும் சுட்டிக் காட்டினேன். 

கூடவே மூன்று மாத ரத்த க்ளூகோஸ் சராசரி அளவுகளும் கூடியிருந்தது. தினமும் பேரீச்சம் பழம் + உலர் திராட்சை + தேன் + பாதாம் + முந்திரி + பிஸ்தா + அத்தி பழம்  இவற்றை இரவு ஊற வைத்து  காலையில் உடல் நலனுக்காக உண்பதை வழக்கமாக கடந்த சில மாதங்களாக வைத்துள்ளார் 

அவருடைய உணவு என்பது மூன்று வேளையும் தானியங்கள் சார்ந்த அதிக அரிசி சார்ந்த உணவு முறையாக உள்ளது இவையன்றி தினமும் வாழைப்பழம் அவ்வப்போது மாதுளை / மா / பலா போன்ற இனிப்பு சுவை அதிகம் கொண்ட பழங்களை அதிகமாக உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. 

Must Read: மாங்காய்களை பழுக்க வைத்து உண்ணுங்கள்…

மாதம் ஓரிருமுறை சிறிதளவு "மதிமயக்கும் பழரசம்"  பருகும் வழக்கமும் உண்டென்பதைக் கூறினார். பாதாம் / பிஸ்தா போன்ற மாவுச்சத்து குறைவான நட்ஸ் வகைகளை தினமும் சிறிதளவு உண்பதில் பிரச்சனை இல்லை ஆனால் தினமும் ஃப்ரக்டோஸ் மற்றும் இனிப்பு சுவை அதிகம் கொண்ட பேரீச்சம் பழம் + தேன் + ரெய்சின்ஸ் ( உலர் திராட்சை) கூட்டணியை உண்பது என்பது அவரது ட்ரைகிளசரைடு அளவுகளை உயர்த்தி இருக்கக் கூடும் 

அதிக இனிப்பு பழங்களை தவிர்க்க வேண்டும்

கூடவே கல்லீரல் பிலிருபின் அளவுகளையும் உயர்த்தி இருக்கக் கூடும். பலரும் உடலுக்கு ஹெல்த்தி என தவறாக எண்ணிக் கொண்டு இதைப் போல அதி இனிப்பான பேரீச்சம் பழம் - மிக அதிக சுக்ரோஸ் தேன் - க்ளூகோஸ் + ஃப்ரக்டோஸ் அத்தி பழம் - அதிக இனிப்பு  உலர் திராட்சை - அதிக இனிப்பு  போன்றவற்றை தினமும் உட்கொண்டு வருகின்றனர் 

இவ்வாறு அதிக இனிப்பு அதிக ஃப்ரக்டோஸ் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறி உட்கொண்டு வருபவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு படியும் நோய் / இன்சுலின் எதிர்ப்பு நிலை/ நீரிழிவு / ரத்த கொதிப்பு / உடல் பருமன் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை அறிந்து கொண்டு பின்பற்றுங்கள். நீரிழிவு நோயாளிகளும் ரத்தக் கொதிப்பு நோயர்களும் பிசிஓடி ஒபிசிட்டி இருப்பவர்கள் கூட இவற்றை இன்னதென்று அறியாமல் சாப்பிட்டு வருகின்றனர் 

Must Read:30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருப்பைவாய் பரிசோதனை செய்வது அவசியம்…

பழங்கள் நன்மை தருபவை என்பது சரிதான்  ஆனால் அவை இனிப்பாக இருப்பதால் வரம்பு மீறி பழங்கள் என்றாலே அவை நன்மை தான் எனும் கோணத்தில் அணுகி  இனிப்பான பழங்களை அரிதாக மருந்தாக உண்ண வேண்டிய  தேனுடன் இணைத்து தினமும் உட்கொண்டால் நன்மையை விட தீமையை அதிகம் விளைவிக்கலாம் .பழங்கள் அனைத்தும் இனிப்பற்ற நிலையில் இருந்தால் அதை யாரும் சீண்டப்போவதில்லை. பழங்களில் இனிப்பு இருப்பதாலும்

மனிதனின் மூளை இனிப்புக்கு அடிமை என்பதாலும் எளிதாக பழங்களில் வரம்பு மீறும் வாய்ப்பு உள்ளது  நீரிழிவு நோயர்கள் ,உடல் பருமன் , ரத்தக்கொதிப்பு, இதய நோய் ,சிறுநீரக நோய் , பிசிஓடி போன்ற பிரச்சனைகள் இருப்போர் இனிப்பான பழங்களை பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது .

குழந்தைகள் வளர் இளம் பருவத்தினர்  உடல் உழைப்பு செலுத்தும் மக்கள் தேவையான அளவு - பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக உட்கொள்ளலாம். அளவறிந்து  அதன் தன்மையறிந்து உண்ண வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே 

-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா , பொது நல மருத்துவர் , சிவகங்கை

#avoidtoosweetfoods ##avoidhighfructosefoods #healthyfoods


Comments


View More

Leave a Comments