
மரபியலும், அறவியலும், அறிவியலும் சேர்ந்த பயிற்சி நிறைவு
தென்காசி மாவட்டம் பொதிகைச் சோலையில் இரண்டு நாள் அறிவியல்முறை இயற்கை வேளாண்மைப் பயிற்சி இனிதே நிறைவுற்றது. முப்பது பயிலுநர்கள் கலந்து கொண்டார்கள். மிக அதிகமான ஆர்வலர்கள் விண்ணப்பித்திருந்தனர். தங்குமிட வசதி கருதி 25 பேர்கள் மட்டும் போதும் என்று முடிவெடுத்தோம். ஆனாலும் இருக்கின்ற வசதியைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறி மேலும் ஐந்து நண்பர்கள் இணைந்து கொண்டனர். ஆக முப்பது பேர் கொண் குழுவாக பயிலரங்கம் மாறியது.
Must Read: வெங்காயத்தின் நன்மைகள்; ஜலதோஷம் முதல் முடி உதிர்வதை தடுப்பது வரை பலன் தரும்
பயிற்றுநர்களாக பாமயன், முனைவர் நடராசன், ஆரோவில் ராஜகணேஷ் ஆகியோர்களும் மேலும், இயற்கை உணவியல் அறிஞர் சிவகாவி மாறன், சிரிப்பு யோகா வல்லுநர் கிரிதரன் ஆகியயேர் மாலை வகுப்புகளை நடத்தினார்கள். மிக ஆர்வமாக பயிலுநர்கள் பங்கெடுத்தனர். ஏராளமான வினாக்கள் தொடுத்து விடை பெற்றனர்.
பலர் ஏற்கனவே இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தனர். ஆயினும் பல விளக்கங்களை இப்பயிற்சியில் பெற்றதாகக் கூறினர். குறிப்பாக, C3 தாவரங்கள், C4 தாவரங்கள் பற்றிய விளக்கம், இதுவரை மழைநீர் அறுவடை என்று பேசினோம், இப்போது வெயில் அறுவடை பற்றித் தெரிந்து கொண்டோம் என்றும் கூறினர்.
ஒரு சதுர அடியில் விழும் வெயில் எவ்வளவு உணவு தயாரிக்கும் என்றும் அப்படியானால், எப்படிப் பயிர்களில் இலைப் பரப்பை அமைக்க வேண்டும் என்ற அறிவியல் விளக்கப்பட்டது. அனைத்துத் தொழில்நுட்பங்களுக்கும் அறிவியல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன, சவ்வூடுபரவல், ஒளிச்சேர்க்கை, மட்கு அறிவியல், குறைந்த அளவு விதி போன்றவை விளக்கப்பட்டன.
Must Read: சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதே ஊட்டசத்து குறைபாட்டுக்கான தீர்வு…
தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வழியாக எப்படி திணையியல் வாழ்வியல் முறை அமைக்கப்பட்டது என்பது பற்றி விளக்கப்பட்டது. தமிழர்களின் திணையியல் கோட்பாடுகளை எப்படிப் பண்ணை வடிவமைப்பில் பயன்படுத்துவது, குறிஞ்சி, முல்லை, மருத நிலங்களைக் கண்டறிவது எப்படி? என்ற தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
அறிவியலும், அறவியலும், மரபியலும் கலந்த உரைகளால் பயிலுநர்கள் ஆழமான அறிவை விரிவாக்கிக்கொண்டார்கள். முதல்நாள் முன்னிரவு தொடங்கிய இடியுடன் கூடிய பெருமழை கொட்டித் தீர்த்தது.
"இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள்,
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து"
என்ற கலித்தொகைப் பாடல்போல் இயற்கை அமைந்தது.
சேற்றில் இறங்கி, ஒற்றை நாற்று நட்டு குலவையிட்டு மகிழ்ந்தார்கள்.தங்குமிடத்தையும், மேற்குத் தொடர்சி மழையின் அழகையும் அனைவரும் ரசித்துச் சிலிர்த்தார்கள், குற்றாலச் சாரலும் தென்காசித் தூறலும் மனத்திற்கு மிக இதமாக இருந்தது.அருவிபோல் கொட்டும் குளியல் கோபுரத்தில் (Bath tower) குளித்து மகிழ்ந்தார்கள்.
பயிற்சியை மேலும் இரண்டு நாட்கள் அதிகப்படுத்த வேண்டும் என்றும் பலர் கேட்டுக் கொண்டனர். ஆயினும் பயிற்சிக்குப் பின்னர், திணை வேளாண்மை முறையை தங்களது பண்ணையில் தொடருவோம் என்றும், அதற்கான தொடர்ந்த ஒத்துழைப்பு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பொதிகைச்சோலை ஊழியர்களின் விருந்தோம்பல் பயிலுநர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது. அனைவரும் நன்றி கூறி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு பிரியா விடை பெற்றனர்.இப்பயிற்சி அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக வாழ்நாள் முழுக்க இருக்கும்.
நன்றி; திரு.பாமயன் முகநூல் பதிவு
(முகப்பு படம்;பொதிகை சோலையில் நடைபெற்ற முந்தைய பயிற்சி ஒன்றில் எடுக்கப்பட்டது. செய்தியின் உள்ளே உள்ள படம் இந்த இரண்டு நாள் பயிற்சியில் எடுக்கப்பட்டதாகும்)
#AgriTraining #OrganicAgriTraining #AgriScience
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments