கொத்தவரையை இப்படியும் சாப்பிடலாம்
பீன்ஸ் போலவே இருக்கும் சத்துமிக்க பசுமை காய்கறிகளில் ஒன்று கொத்தவரை. இதனை சீனி அவரை என்றும் சொல்வார்கள். கொத்தவரையில் ஏகப்பட்ட சத்துகள் உள்ளன. கொத்தவரை பொறியல் அல்லதுகூட்டு வைக்கும்போது சிலருக்கு பிடிக்காமல் போவதுண்டு. ஆனால், அதில் உள்ள சத்துகளையும் அதை வத்தலாக தயாரித்து உண்ணலாம் என்று தெரிந்தால் பின்னர் கொத்தவரையை விடமாட்டீர்கள். ஆம் கொத்தவரையில் உள்ள சத்துகளையும்,அதனை வத்தலாக செய்வது பற்றியும் பார்க்கலாம்.
கொத்தவரை சத்துகள்
கொத்தவரையில் நார்சத்து அதிகம் இருக்கிறது. இது தவிர பொட்டாசியம், போலேட்ஸ் ஆகியவையும் கொத்தவரையில் உள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்துகளையும் கொத்தவரை தருகிறது. நார் சத்து அதிகம் இருப்பதால் ஜீரண கோளாறுகளுக்கு கொத்தவரைக்காய் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. கொத்தவரையின் இலைகளும் மருத்துவப் பயன்களைக் கொண்டதாகும். ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய அடைப்பை சரி செய்யும்
முக்கியமாக வலி நிவாரணியாகவும் கொந்தவரைக்காய் உபயோகிக்கப்படுகிறது. மூட்டு வலியை குறைப்பதுடன், கட்டிகளை கரைக்கவும், புண்களை ஆற செய்வதற்கும் கொந்தவரங்காய் உதவுகிறது. கொத்தரவை நமது ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய அடைப்பை சரி செய்கிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
கொத்தவரையில் உள்ள சத்துகள் ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கெட்ட கொழுப்பின் தன்மையையும் குறைக்கும். குறிப்பாக கர்பிணி பெண்கள் கொத்தவரையை தைரியமாக சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மன அழுத்தம் போக்கும்
அவசர கதியில் இயங்கும் உலகத்தில் நம்மில் பலருக்கு பதற்றம், மனநெருக்கடி,ஆகியவை ஏற்படும். இதனால் இரவு தூக்கமும் பறிபோய் விடும்.கொந்தவரைக்காய் நமது உடலில் இருக்கும் நரம்புகளுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. எனவே தூக்கமின்மையில் இருந்து விடுபட கொத்தவரைக்காய் சாப்பிடலாம்.
இதையும் படியுங்கள்: மெல்லக் கொல்லும் மென்பானங்களை தவிருங்கள்
விவசாயி ஒருவரின் அனுபவம்
செஞ்சி அருகில் உள்ள உழவர் வ.சதீஸ் நவீன விவசாயிகளில் ஒருவர். தான் விளைவிக்கும் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் திறன் கொண்டவர். அவர் அண்மையில் தன்னுடைய தோட்டத்தில் கொத்தவரை பயிரிட்டார். அவர் கூறுவதைக் கேளுங்கள்.
“நாம வருசகணக்கா மருந்தில்லாம விவசாயம் செஞ்சாலும் இந்த நஞ்சு தெளிக்குற விவசாயிகளுக்கு நம்மள பார்த்தா விவசாயினு பேரே கொடுக்க மாட்டாங்க.எது ஏக்கருக்கு 10 மூட்டை 15 மூட்டை அறுத்து தள்ளுதே அந்த தம்பியா என்று நக்கல் பேசுறவங்க அதிகம்.சில சமயம் நமக்கே தோனும் நாம விவசாயம் தான் பன்னறோமா இல்ல.. நாம விவசாயம் செய்யறதா நம்பிக்கிட்டு கிடக்கறோமா?? னு...
சரி விசயத்துக்கு வாரேன்!! நம்ம அறல் கழனில சாகுபடி செஞ்ச கொத்தவரை இன்னிக்கு ஒடைக்க போனோம்.இரண்டு நாலாக சம்பா நாற்றங்கால் வேலைனால பறிப்பு லேட் ஆகிடுச்சு. காய் இரண்டு நாட்கள் முற்றல் , வத்தல் நல்லா இருக்காது.. சாம்பாருக்கு தான் காய் ஆகும்!!
சரினு காய்கறி கடைக்கு போன் அடிச்சேன் போன வாரம் ₹10/கி சொன்னாரு.. இன்னிக்கு ₹20/கி சொன்னாரு. சரி விலை பரவாயல்லைனு.. மூட்டை கட்டி வண்டியில ஏத்தின. அப்படியே ரோட்ல போகும் போது தான் தோனுச்சு!! நாம கூட நம்ம விவசாயம் செஞ்ச காய்கறிய மார்கெட்டுக்கு எடுத்துட்டு போறோம்ல... நானும் விவசாயிதான்.சரி தோன்றத படமா பிடிச்சிடலாம்னு பல்ல காட்டமா சுயபடம் எடுத்தேன்.
கொத்தவரை வத்தல் செய்யலாம்
எப்பையாவது விலை ஏறிச்சுனா இது மாதிரி மார்கெட்டுக்கு எடுத்துட்டு போலாம்னு தோனுச்சுகொத்தவரை வத்தல் வாங்கனவங்க அருமையா இருக்குனு பதில் அனுப்பிட்டாங்க. நம்ம கொத்தவரை வத்தல் எண்ணெயில பொரிச்சு . மேல எலும்மிச்ச பழத்த லேசா பிழிஞ்சி,சாட் மசாலா அல்லது மிளகு அல்லது மிளகாய் பொடி பரபரபரன்னு தூவி , கல்உப்ப நுனுக்கி அப்படியே மழை சாரல் மாதிரி போட்டு.
அந்த வத்தல எடுத்து வாயில வச்சு style , getha கடிச்சு சாப்பிட்டா அல்லுது....ப்பா... அந்த கொத்தவரை லேசான கசப்பு, எலுமிச்ச வாசம் மிளகாய் பொடி காரம் எல்லாம் கலந்து ... Lays... என்னங்க lays.. லேசா நம்ம வத்தல் சாப்பிட்டு சொல்லுங்க.கொத்தவரை வத்தல்-₹150/கால் கிலோ மட்டும்தான்,” என தன் அனுபவத்தை சதீஸ் வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் உழவர் வ.சதிஸ்.,B.E (Civil) அவர்களை 8940462759 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். கொத்தவரை வத்தல் அவரிடம் இருந்து வாங்கலாம்.
கொத்தவரை எங்கு கிடைக்கும்?
கொத்தவரை நமது தெருவில் இருக்கும் காய்கறிக்காரரிடம் கிடைக்கும். சிறு நகரங்களில் இருக்கும் உழவர் சந்தைகள், காய்கறி சந்தைகளில் கிடைக்கும். பெருநகரங்களில் இருக்கும் சூப்பர் மார்கெட்களில் கிடைக்கும். ஆன்லைனிலும் கொத்தவரை கிடைக்கும். பழமுதிர் சோலை உள்ளிட்ட பல காய்கறி விற்பனை நிறுவனங்கள் ஆன்லைனிலும் காய்கறிகள் விற்பனை செய்கின்றன. அவர்களிடமும் கொத்தவரை கிடைக்கும்.
இதையும் படியுங்கள்:மலட்டு தன்மையை போக்கும் துரியன் பழம்
மாடிதோட்டத்தில் பயிரிடலாம்
அடிக்கடி கொத்தவரைக்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் வீட்டு மாடியில் இடம் இருந்தால், அல்லது வீட்டின் பின்புறம் இட வசதி இருந்தால் கொத்தவரையை தாங்களே பயிர் செய்யலாம்.
கொத்தவரை ஆப்ரிக்கா நாட்டை தாயகமாக கொண்டது. இப்போது இந்தியாவிலும் அதிகம் வளர்கிறது. இந்தியாவில் எல்லா பருவகாலத்திலும் இதைப் பயிரிட முடியும். கொத்தவரையை விதைத்த நாற்பத்தைந்து நாட்களில் காய்கள் கிடைத்து விடும்.
எனவே குறுகிய காலத்தில் சமையலுக்கு தேவையான காய்கறிகள் நமக்குகிடைக்கும். மாடித்தோட்டத்திலும் எளிதாக வளர்க்க முடியும், காய்கறி செடிகள் வளர்க்கும் பைகள் அல்லது தொட்டிகளை பயன்படுத்தலாம்., விதைத்த உடன் கொத்தவரை தொட்டியில் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
விதை எங்கே கிடைக்கும்?
மாடித்தோட்டத்துக்கான விதைகளை சென்னையில் மாதவரத்தில் உள்ள அரசின் தோட்டக்கலை பண்ணையிலும் மாவட்டங்களில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளிலும் வாங்கலாம். இது குறித்த தகவல்களை அரசு தோட்டக்கலைத்துறையின் இணையதளத்தில் அறியலாம்.
பா.கனீஸ்வரி
#ClusterBeans #ClusterBeansBenefits #HealthyClusterBeans #Kottavarakkai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments