ஆரோக்கியமான பாரம்பர்ய கை முறுக்கு
- எப்படி செய்யலாம் கை முறுக்கு
- எங்கெல்லாம் கைமுறுக்கு கிடைக்கும்?
- பாரம்பர்ய கைமுறுக்கு விற்கும் இடங்கள்
கைமுறுக்கிலும் பல வகைகள்
அச்சுமுறுக்கு, நெய்முறுக்கு, மணப்பாறை முறுக்கு, வள்ளியூர் முறுக்கு, செட்டிநாடு முறுக்கு என வெவ்வேறு வகையான முறுக்கு வைகைகள் உள்ளன. ஒவ்வொரு முறுக்கும் சுவையிலும், பாரம்பர்யத்திலும் வித்தியாசமான சுவையைக் கொண்டவை. இது தவிர கை முறுக்கு என்று ஒன்று உள்ளது. இதனை கை சுத்து முறுக்கு அல்லது கை சுத்தல் முறுக்கு என்றும் உள்ளது. இந்த முறுக்கு வகையை தயாரிப்பதற்கு இடியாப்ப கட்டை அல்லது முறுக்குப் பிழியும்கட்டை எதையும் பயன்படுத்தமாட்டார்கள்.
இதையும் படியுங்கள்:நெல்லை இருட்டுக்கடை அல்வா… பாரம்பர்யமாக தொடரும் இனிப்பின் சுவை…
கையிலேயே சுற்றும் முறுக்கு
முறுக்கு மாவு தயாரிக்கப்பட்ட உடன் அந்த மாவை கைகளில் வைத்துக் கொண்டு, கையினாலேயே முறுக்குப் பிழிவதுதான் கைமுறுக்கு அல்லது கைசுத்தல் அல்லது கை சுத்து முறுக்கு என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கைது சுத்து முறுக்கானது செட்டிநாடு, வள்ளியூர் ஆகிய பகுதிகளில் மிகப் பிரபலமான ஒன்றாகும். அதனை எப்படி செய்வதுஎன்று பார்க்கலாம்.
என்னென்ன பொருட்கள் தேவை?
அரிசி மாவு 3 கப் எடுத்துக் கொள்ளுங்கள், அத்துடன் உளுந்து மாவு கால் பங்கு கப் இருக்க வேண்டும். டால்டா தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம். அளவு வேண்டும் என்பவர்கள், ஒன்றரை டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டால் போதுமானது. உப்பு உங்களுக்குத்தேவையான அளவு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள், 100 கிராம் அளவுக்கு சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெண்ணைய் அரைகப் எடுத்துக் கொள்ளுங்கள், முறுக்கை போட்டு எடுப்பதற்கு தேவையான எண்ணைய் எடுத்துக்கொள்ளுங்கள்.
கை முறுக்கு எப்படி செய்வது?
நீங்கள் தயாராக வைத்திருக்கும் அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, டால்டா வெண்ணைய் ஆகியவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, சீரகமும் போட்டு மாவை நன்றாக பிசைய வேண்டும். மாவுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். ஒரேடியாக ஊற்றக் கூடாது சிறிது, சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும்.
கையில் வைத்துப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு மாவை எடுத்துக் கொண்டு, மாவை பென்சிலைப் பிடித்துக் கொள்வது போல பிடித்து ஒரு தட்டின் மேலே கைகளால் பிழிய வேண்டும். வட்டவட்டமாக பிழிந்த உடன், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை சுற்று வந்த உடன் நிறுத்தி விட்டு, அதனை அப்படியே எண்ணைய் சட்டியில் போட வேண்டும். இப்படி ஒரு எண்ணைய் சட்டியில் சட்டியின் அகலத்தைப் பொறுத்து ஒரே நேரத்தில் சில முறுக்குகளை வேகவிடலாம். முறுக்கான பொன்னிறத்தில் வெந்த உடன், கம்பி கொண்டு முறுக்கினரை எடுத்து பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். இந்த சுவையானமுறுக்கில் நிறைய சத்துகள் உள்ளன.
அரிசி மாவு, உளுந்து மாவில் உள்ள சத்துகள்
அரிசி மாவில் பொதுவாகவே, நார்சத்து உள்ளது. அரிசி மாவு எளிதில் ஜீரணம் ஆக க் கூடியதாகும், அதேபோல உளுந்து மாவிலும் அதிக சத்துகள் உள்ளன. குறிப்பாக உளுந்தில், புரதம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ் பாஸ்பரஸ் போன் சத்துகளும் உள்ளன. எனவே இரண்டுமே ஆரோக்கியமானதுதான். அரிசி மாவும், உளுந்து மாவும் கலந்த மாவில் செய்யப்பட்ட முறுக்கு ஒரு ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இதையும் படியுங்கள்:டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களின் காலை உணவு இதுதான்...
முறுக்கு உங்களால்செய்ய இயலாவிட்டாலும் கடைகளிலேயே இன்று முறுக்கு கிடைக்கிறது. நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல வள்ளியூர் கை முறுக்கும் வாங்கலாம்.
வள்ளியூர் முறுக்கு விற்பவர்
திருநெல்வாலி மாவட்டத்தில் திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவில் வள்ளியூர் இருக்கிறது. வள்ளியூர் பேருந்து நிலையத்திலேயே வள்ளியூர் முறுக்கு உங்களுக்கு கிடைக்கும். பேருந்து நிலையத்தில் மோகன் என்பவர், நீண்டகாலமாக வள்ளியூர் கை முறுக்கு விற்பனை செய்து வருகிறார்.
40ஆண்டாக விற்கிறார்
வள்ளியூர் நண்பர்கள் குழு முகநூல் தளத்துக்கு மோகன் அளித்த பேட்டியில், “எனக்கு இப்போ 54 வயசு. 40 வருஷமா இந்த முறுக்கு விக்கிற வேலையை செஞ்சிக்கிட்டு இருக்கேன். அம்மச்சிகோயில் தான் என் சொந்த ஊர்.ஆரம்பத்துல நான் இஞ்சி மிட்டாய், கடலை மிட்டாய் தான் வித்தேன். அதுக்கு அப்புறம் தான் முறுக்கு விக்க ஆரம்பிச்சேன். அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரே முதலாளி தான். எங்க தில்லை முதலாளி கிட்ட தான் இப்பவும் வேலை பார்க்கிறேன். அதே மாதிரி நாங்க கடைகளுக்கு முறுக்கு சப்ளை பண்றதில்லை.
அந்த காலத்தில் வள்ளியூருக்கு ஒரே நேரத்தில் இருபது டவுன் பஸ் விட்டாங்க. ஒண்ணாம் நம்பர்ல இருந்து இருபதாம் நம்பர் வரை. நான் முறுக்கு விக்க ஆரம்பிக்கும்போது ஒரு முறுக்கு நாலணா. அதாவது இருவத்தஞ்சு பைசா. இன்னைக்கு ஒரு முறுக்கு அஞ்சு ருபா.
வெளியூர்காரர்கள் வாங்குகின்றனர்
சென்னை, மும்பை மாதிரி பெரிய நகரங்களில் இருந்து வரவங்க, வந்துட்டு போறவங்க நிறைய வாங்குவாங்க. அதே மாதிரி வெளிநாட்ல இருந்து வரவங்களும் விரும்பி நிறைய வாங்கிட்டு போவாங்க. கல்யாணம், சீமந்தம், ஆடி மாதம் சீசன்ல நிறைய வாங்குவாங்க. எங்க முறுக்கு ஒரு மாசத்துக்கு வச்சி சாப்பிடலாம்,”.என கூறுகிறார்.
கைமுறுக்கு எங்கெல்லாம் கிடைக்கும்?
நீங்கள் திருநெல்வேலி போகும் போது வள்ளியூர் சென்று கைமுறுக்கு வாங்க மறக்க வேண்டாம். கைமுறுக்கு இப்போது ஆன்லைனிலும் கிடைக்கிறது. சென்னையிலும் பிரபலமான உணவகங்களிலும் கிடைக்கிறது.சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து செயல்படும் சுவீட்காரம் காப்பி என்ற இணையதளம், சென்னை மயிலாப்பூரில் உள்ள கணபதீஸ் என்ற உணவு இணையதளம் வாயிலாகவும் கைமுறுக்கை நீங்கள் வாங்கலாம். சென்னை அங்காடி என்ற இணையதளத்திலும் நீங்கள் விரும்பும் விலையில் கைமுறுக்கு கிடைக்கிறது. கோவையில் பரிமளா சுவாமிநாதன் என்பவர் வீட்டில் கை முறுக்கு செய்து விற்பனை செய்கிறார். இது குறித்த தகவல்களை இந்து ஆங்கில செய்தியில் இதைத் தெரிந்து கொள்ளலாம். செட்டிநாடு கைமுறுக்கு வேண்டும் என்பவர்கள் செட்டிநாடு ஸ்நாக்ஸ் ஆன்லைன் இணையதளம் வாயிலாக வாங்கலாம்.
பா.கனீஸ்வரி
#Kaimurukku #TraditionalKaimurukku #KaiSudduMurukku #VllliyurKaiMurukku #ChetinaduKaiMurukku
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments