மழை காலத்திற்கு ஏற்ப உணவு முறையில் மாற்றம் தேவை...


மழைக்கு ஏற்ற வாழ்வியல் முறைகள் 

தளர்வான ஜீன்ஸ் உடைகள் அணியலாம் 

நீர் காய்கறிகளை தவிர்க்க வேண்டும்

சூடாக சமைத்த உணவுகள் உண்ணலாம்

மழைக் காலத்தையும், குளிர்காலத்தையும் ’ரொமான்டிக்’ சீசனாக பார்த்த சூழ்நிலை மாறிவிட்டது. ‘மழை அல்லது குளிர்காலத்தில் எந்த எந்த நோய்களுக்கு இரையாகப் போகிறோமா’ என்று அச்சப்படும் காலம் தான் இப்போது. குறிப்பாக சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இரைப்பு (ஆஸ்துமா) நோயால் அவதிப்படுபவர்களுக்கும் நிறைய பயத்தை உண்டாக்கும் காலமாகவே இருக்கிறது. நோய்களைக் கண்டு அச்சப்படாமல், இயற்கையோடு இயைந்து மழையின் உயிர்ப்பினை உணர, குளிர்ச்சியின் சிலுசிலுப்பினை அனுபவிக்க அனைவரும் செய்ய வேண்டியது என்ன?

உணவு… உடை… இருப்பிடம்:

உணவு, உடை, இருப்பிடம்… இம்மூன்றும் வாழ்வதற்கு அத்தியாவசியம். வாழ்வதற்கு மட்டுமல்ல நோயின்றி வாழ்வதற்கும் தான். அத்தியாவசியத் தேவைகளான ’உணவு, உடை, இருப்பிடத்தை’ கால நிலைக்கு ஏற்ப முறைப்படுத்திக் கொண்டால், அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கும் மழைக் காலத்தை நோயின்றி மகிழ்ச்சியாக கடக்கலாம். 

Also Read: மழை நேரத்துக்கான இயற்கை உணவுகள் என்னென்ன சாப்பிடலாம்?

வடகிழக்கு பருவ மழைக் காலத்தை இயற்கையோடு சேர்ந்து கொண்டாடலாம். உணவு… உடை… இருப்பிடம்… எப்படி தகவமைப்பது!...

உணவு:

பருவ நிலைக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக் கொள்வதென்பது நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் தடுக்க, நெடுங்காலமாய் பயன்பாட்டில் உள்ள முக்கியமான உத்தி. ஆனால் அந்த உத்தியை பயன்படுத்த நாம் தயாராக இல்லை. பழமைவாதம் என்று புறந்தள்ளிவிடுகிறோம். ஆனால் பழமையில் இருக்கும் அறிவியலைப் புரிந்துக்கொண்டு செயல்படுவது தான் புத்திசாலித்தனம்.

உணவியல்:

உணவுகளை அப்போதைக்கு தயார் செய்து சூடாக சாப்பிட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குளிர்சாதன பெட்டியில் இரவு முழுவதும் உறங்கிய உணவுகளை, மறுநாள் பயன்படுத்த வேண்டாம். கீரைகளையும் தயிரையும் இரவு வேளைகளில் உபயோகிக்கக் கூடாது. நீர்க் காய்களான புடலை, பீர்க்கு, பூசணி போன்றவைகளுக்கு சில மாதங்களுக்கு தற்காலிக ஓய்வு அளித்துவிடலாம். 

உணவில் மிளகு சேர்துதக் கொள்வது மழைகாலத்துக்கு நல்லது

உணவுப் பொருட்களில் மிளகுத் தூளைத் தூவி சாப்பிடுவதும் நல்லது. பொதுவாக மிளகை அதிகமாக உணவுகளில் சேர்த்துக் கொள்வதால், நோய்களை எதிர்க்கும் உடலின் சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். அசைவப் பிரியர்கள், நாட்டுக் கோழி ரசம், ஆட்டுக்கால் சூப், நண்டு ரசம் போன்ற வகையறாக்களை ரசித்து சுவைக்கலாம். பனிக்கூழ் (ஐஸ்கிரீம்), குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீர் ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும். குறிப்பாக குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருப்பது முக்கியம்.

தூதுவளை:

மழை மற்றும் குளிர் காலத்தில் வெப்ப வீரியமுள்ள உணவுகளை நமது உடலுக்குள் அனுப்புவது சாலச் சிறந்தது. சூடான உணவுகளை மனம் தேடும் போது, டீ, காபிக்களுக்கு பதிலாக தூதுவளை சூப் தயார் செய்து குடிக்கலாம். இப்போதைய சூழ்நிலையில் மாலை வேளையில் குடிப்பதற்கான அற்புதமான பானம் தூதுவளை சூப். குளிருக்கு இதமான பானமாக மட்டுமன்றி, சளி, இருமல் போன்ற கப நோய்களுக்கும் முக்கியமான எதிரி தூதுவளை. அவ்வப்போது நம்முடைய தினசரி உணவுகளுக்குத் துணையாக தூதுவளை சட்னி/துவையலைப் பயன்படுத்தலாம்.

கப நோய்களுக்கு:

கொள்ளு ரசத்திற்கு அதிகமாக வாய்ப்பளியுங்கள். ’குலத்தங் கபத்தினைக் கூற்றெனத் துரத்தும்’ என்ற தேரையர் காப்பிய நூலின் வரி, கொள்ளானது கப நோய்களை துரத்தும் என்பதை விளக்குகிறது. கண்டங்கத்திரி, ஆடாதோடை, துளசி போன்ற மூலிகைகளின் ஆதரவும் இக்காலத்தில் நமக்கு மிகவும் அவசியம். குடிக்கும் நீரில் துளசி இலைகளையும், கற்பூரவல்லி இலைகளையும் போட்டு காய்ச்சிக் குடிக்கலாம். 

துளசி தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம் தரும்

இயற்கையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் கேரளத்தை முன்னோடியாக குறிப்பிடலாம். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, சில மூலிகை கலவைகளை கலந்து குடிக்கும் வழக்கம் அவர்கள் பாரம்பரியத்தில் ஊறிய ஒன்று.

இருமல் உண்டாகும் போது, இரண்டு மிளகைப் பொடி செய்து, தேனில் குழைத்து எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு கற்பூரவல்லி சாறினை எடுத்து சுண்ட வைத்து சுரசமாக கொடுத்து வருவது சிறந்தது. பாலில் மிளகுத் தூளும் மஞ்சள் தூளும் கலந்து பருகுவதும் கப நோய்களை எதிர்க்க உதவும். சுக்கு காபியானது தொண்டை கரகரப்பில் தொடங்கி, கெட்டிப்பட்ட கோழை வரை குணமாக்கும் தன்மை கொண்டது. மழைக் காலத்தில் ஏற்படும் கப நோய்களை குணமாக்க தாளிசாதி சூரணம், திப்பிலி இரசாயனம், திரிகடுகு சூரணம் தூதுவளை நெய் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். வெளிப்பிரயோகமாக நீர்க்கோவை மாத்திரைப் பற்று தலைபாரத்தை இறக்கி வைக்கும் பலமான ஆயுதம். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு தவறாமல் ஆவி (வேது) பிடிப்பதால் தலைபாரம், தலைவலி போன்றவை பறந்து போகும்.

உடை:

கால வரைமுறையின்றி பருவ நிலைக்கு தகாத உடைகளை அணிவதே பெரும்பாலோனாரின் வழக்கமாக இருந்து வருகிறது. வெயில் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில், மேனி உருகும் அளவிற்கு ’ஜீன்ஸ்’ வகை ஆடைகள் அணிந்திருப்பவர்களை சாதாரணமாக பார்க்க முடியும். மேலை நாட்டு பருவ நிலைக்கு தகுந்த ஜீன்ஸ் ஆடைகளை அணிய விரும்பினால், அதற்கு உகந்த காலம் இப்போது மட்டுமே. அதுவும் வாரக் கணக்கில் அணிபவர்களுக்கு தோல் நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். குளிர் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் ஜீன்ஸ் உடைகளுக்கு அடைக்கலம் கொடுக்கலாம். அதிலும் மிகவும் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளை நீண்ட நேரம் அணிய வேண்டாம்.

Also Read: இயற்கை உணவுக்கு மாறியதால் குணம் பெற்றவரின் அனுபவ கட்டுரை

கொசுக்கள் பற்றி நிறைய பேசிவிட்டோம். இருப்பினும் மழையின் தீவிரம் அதிகரிக்கும் போது, கொசுக்களின் ஆதிக்கமும் பெருக வாய்ப்புண்டு. உடலை முழுவதுமாக மறைக்கும் அளவிற்கு முழு கை கொண்ட சட்டைகளை அணிந்துக் கொள்வதின் மூலம் கொசுக்கள் மட்டுமன்றி, அளவுக்கதிகமான குளிரிலிருந்தும் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும். 

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உடைகளின் மூலமே குளிர்கால நோய்களை வராமல் தடுக்க முடியும். இரவுகள் நீண்டும் குளிர்மையாகவும் இருக்கும் இக்காலத்தில் கம்பளி உடைகளை முதன்மையாக உபயோகிக்கலாம். காதுகளில் குளிர்மையான காற்று செல்லாத வண்ணம் ஸ்கார்ஃப் பயன்படுத்துவது முக்கியம். குறிப்பாக பயணம் மேற்கொள்ளும் போது, குளிர்காற்று காதுகளுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்வதும் நல்லது.

இருப்பிடம்:

நமது இருப்பிடத்தை சுற்றி மழை நீரைத் தேங்க விடாமல் பார்த்துக் கொள்வது இப்போதைய டெங்கு காலத்தில் மிகவும் முக்கியம். மழை இல்லாத நேரம் மற்றும் பகல் வேளைகளில் வீட்டின் சாளரங்களை திறந்து வைத்து, சூரிய ஒளி வீட்டிற்குள் நுழையுமாறு வழிவகை செய்ய வேண்டும். குளிப்பதற்கு வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். 

Also Read: சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாமா?

குளிர்ச்சியான வெறும் தரையில் படுத்து உறங்கும் செயல் தவறானது. பாய் அல்லது மெத்தையில் உறங்க வேண்டும். குளிர்ச்சியான தரையில் அதிக நேரம் புழங்கும் போது, வாத நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உறங்கும் போது, போர்வையை முகம் முழுவதும் மூடி உறங்குவதை தவிர்த்துவிடலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் சூரியனின் இளவொளியில் சிறிது நேரம் வெயிலில் காய்வதால் உடல் புத்துணர்ச்சி அடையும்.

உணவு, உடை, இருப்பிட ஆதாரங்களை தேவைக்கேற்ப அமைத்துக்கொண்டால், அனைத்து பருவ நிலைகளையும் அனுபவித்து வாழலாம். மழைக்காலம்… தவளைகளின் ஒலிகள்… அழகான சூழ்நிலை… ஆங்காங்கே உருவெடுக்கும் மண்வாசனை… என அனைத்தையும் ரசிக்கலாம், பருவகாலம் சார்ந்த வாழ்வியலை முறையாக கடைப்பிடித்தால்!

  -Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

#HealthyDietForRainSeason #DietForRainySeason #WhichIsHealthyAtRain #FoodForRain #FoodForMonsoon 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments