.jpg)
திருச்சியில் முதலாவது தெரு உணவு மையம்…
திருச்சியில் சுகாதாரமான தெரு உணவு மையத்தை வ.உ.சி.சாலையில் அமைக்கும் பணியை உணவுப் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளது. உணவு விடுதிகள், ரெஸ்டாரெண்ட்கள் உணவு வகைகளை விற்பனை செய்தபோதும், அந்தந்த ஊரின் பாரம்பர்யமான உணவு வகைகளை விற்பனை செய்வதற்கென்றே தெருவோர உணவுக்கடைகள் உள்ளன.
Also Read:குளிர்காலத்திற்கு ஏற்ற இஞ்சி, இலவங்கப்பட்டை பால்
தெருவோர உணவுக்கடைகளில் விற்கப்படும் உணவுகள் தரமானவையாகவும், அதே நேரத்தில் விலை குறைவாகவும் இருக்கின்றன. எனவே பிரபலமான உணவகங்கள் அல்லது ரெஸ்டாரெண்ட்களுக்கு இணையாக தெருவோர கடைகளுக்கு என்று அந்தந்த ஊர்களில் உணவு ரசிகர்கள் கூட்டம் இருக்கவே செய்கிறது.
திருச்சியின் பாரம்பர்ய உணவு வகைகளை விற்பனை செய்யும் தெருவோர கடைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் ஒரு மையமாக அமைக்க அரசின் உணவுப்பாதுகாப்புத்துறை திட்டம் வகுத்துள்ளது. அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில், வ.உ.சி.சாலையில் தெருவோர கடைகளுக்கான மையம் அமைக்கப்பட உள்ளது.
உணவு தயாரித்தல், பரிமாறுதல் மற்றும் உணவு முறைகளை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் முதல்கட்டமாக ஒரே மாதிரியான முறையில் சுமார் 50 தெருவோர உணவு விற்பனையாளர்களின் வண்டிகள் இடம்பெறும்.
Also Read:உணவு ஒரு புனிதமான பிரசாதம்
அடுத்ததாக சத்திரம் பேருந்து நிலையம் அருகேயும் இதே போன்றதொரு மையம் அமைக்கப்பட உள்ளது. உணவுப்பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்படி தெருவோர உணவு வண்டி நடத்து்வோர் தங்களது வண்டிகளில் மாற்றங்களை மேற்கொள்ள ஸ்பான்சர்களையும் உணவுப்பாதுகாப்புத்துறை பரிந்துரைக்கின்றது. ஸ்பான்சர்கள் செய்யும் நிதி உதவியின் அடிப்படையில் வண்டிகள் உணவைப் பாதுகாக்க சரியான கூரை மற்றும் கண்ணாடிக் கவசங்கள் அமைக்கப்பட உள்ளது.
Also Read:பரோட்டாவின் சுவையை உணரும் நாம் மைதாவின் தீமைகளையும் தெரிந்து கொள்வோம்
மத்திய பேருந்து நிலையத்தில் சாரதாஸ் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் வாயிலாக பெறப்பட்ட பணம் செலவிடப்படுகிறது. உணவுகளை காட்சிப்படுத்துதல், உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர், எண்ணெய் மற்றும் பிற உணவுப் பொருட்களின் தரத்தை உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்து, அதன் மூலம் திருத்த நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படும்.
தெரு உணவு மையத்தில் உணவு பாதுகாப்பு துறையால் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதும் சரிபார்க்கப்படும். இதன்பின்னர் விற்பனையாளர்களின் தூய்மை மற்றும் சுகாதாரத்தின் அடிப்படையில் சுத்தமான தெரு உணவின் கீழ் பாதுகாப்புச் சான்றிதழை வழங்கப்படும்.
இதன்பிறகும் தெருவோர உணவு மையத்தின் கடைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் இந்த கடைகளில் சுகாதாரம் நிலைநிறுத்தப்படும் என்று என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஆர் ரமேஷ் பாபு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
-ஆகேறன்
#StreetFoods #StreetFoodsInTrichy #TrichyStreetFoods
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments