தமிழக உணவுகளின் நிரந்தர சூப்பர்ஸ்டார் இட்லி என்பது தெரியுமா? உணவு ரசிகர் வெங்கடேஷ் ஆறுமுகத்தின் இட்லி புராணம்…


இட்லி, உலகின் சிறந்த ஆரோக்கிய உணவுகளில் ஒன்று. 5 மாதக் குழந்தை முதல் எவ்வளவு வயதானவர்களும் சாப்பிடும் எளிதில் ஜீரணிக்கும் உணவு உடல் நலம் சரியில்லாதவர்கள் கூட சாப்பிடும் உணவு. 

மொகலாயர்கள் & ஆங்கிலேயர்கள் இந்தியா வரும் வரை நமக்கு எண்ணெயில் பொரித்து வதக்கிச் சாப்பிடும் வழக்கமே இல்லை, அவித்த உணவு , கூழ், களி போன்றவையே..நம் தமிழர் உணவுகள்! அதேபோல எண்ணெயை சூடாக்காமல் அதை அப்படியே பயன்படுத்தும் வழக்கம் நம்மிடம் இருந்தது. 

உளுந்தங்களி, கேப்பை போன்ற களிகளோடு செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் விட்டு வெல்லத்தோடு சாப்பிடுவோம் எண்ணெய்யை சூடாக்குவது, பொரிப்பது, வதக்குவது போன்ற முறைகள் அப்போது கிடையாது தோசைகள் வார்க்கும் பழக்கமும் அப்போது இல்லை.

வசதியானவர்களின் உணவு

கம்பு, திணை, வரகு, கேப்பை, தேன், கிழங்கு, பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்றவையே பிரதான உணவுகள். அரச குடும்பங்களுக்கு வரும் வெளிநாட்டுக் காரர்களால் சிலவகையான உணவுகளில் எண்ணெய் சேர்க்கப்பட்டது. அவை எளிய மக்களிடம் வந்து சேர பலகாலம் பிடித்தது..

Must Read: “தேவலோகத்தில் அமுதம் என்பது பூலோகத்தில் மோரும், மோர் சாதமும்…”

அவித்த உணவுகளில்  புட்டு வகைகள் தான் அன்று முதலில் இருந்தது அரிசிச் சோறு தினசரிசாப்பிடுவது கூட பிற்காலச் சோழர்கள் காலத்தில் தான் வந்ததாம். மதுரையில் ஒரு டாக்குமெண்ட்ரி படத்திற்காக ஒரு சில கிராமங்களுக்குச் சென்றிருந்தேன். அங்கு பல சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன. 

இந்தியச் சுதந்திரதிற்கு முன்பு இட்லிப் பானைகள் என்பது வசதியான வீடுகளில் மட்டுமே இருந்திருக்கிறது. கிராமங்களில் இட்லி சாப்பிடுவது தீபாவளிக்கு மட்டுமே. ஆலங்குச்சிகளால் கட்டம் கட்டமாக ஒரு ப்ரேம் போல குச்சிகளை கட்டி ஒரு பெரிய தட்டில் வைத்து.. (ஒரே ஒரு தட்டு தான்) அதன் மீது துணி விரித்து அந்தக் குழிக்குள் மாவு ஊற்றிபெரிய பாத்திரத்தில் வைத்து மூடி இட்லி அவித்து இருக்கிறார்கள்.

தமிழகத்துக்கு வந்த இட்லி

என்ன இட்லி வட்டமாக இருக்காது. இட்லிப் பானைகள் அலுமினியம் உபயோகத்திற்கு வந்த பின்பே ஏழைகளுக்கு வாய்த்து இருக்கிறது. இட்லி என்பது..எந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு துல்லிய ஆதாரங்கள் ஏதுமில்லை. 

இட்டவி என்பதே இட்லியாக மாறியது என்றும், ஹெளசளர்கள்/ சாளுக்கிய மன்னர்களின் கலாச்சாரம் வந்த பின்பு தான் இட்லி தமிழகம் வந்ததென்றும் ஒரு கூற்று உண்டு. இன்றும் கர்நாடகாவில் பிரத்யேக இட்லி வகைகள் உண்டு என்பது இக்கூற்றிற்கு வலுசேர்க்கிறது. 

பிரத்யேகமான இட்லிப்பானைகள், இட்லித் தட்டுகள் எல்லாம் அதிகபட்சம் 300 ஆண்டுகளுக்குள் தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்கிறார் மதுரை புதுமண்டபத்தில் பாத்திரம் விற்கும் நண்பர் ஒருவர், முதலில் பித்தளையில் தான் வந்தது, பிறகு வெண்கலத்தில் வந்தது.  வசதி மிக்கவர்கள் மட்டுமே அதை விலை கொடுத்து வாங்க முடியும்! ஒரு பானையின் விலை கிட்டத் தட்ட 1சவரன் தங்கத்தின்விலை ஆகும். 

இட்லி பானை முதல் இட்லி குக்கர் வரை

ஆகவே மண்குடிசை வாசல் வராது மாட மாளிகைகள், ஜமீன்கள், மிட்டா மிராசுகள் வீடுகளில் மட்டும் அக்கால ஹைடெக் கிச்சன் வெசல்ஸாக இருந்தது இட்லிப் பானைகள். ரிலையன்ஸ் ₹500 ரூபாய் செல்போன் கொண்டு வந்தபின் சாமானியர்கள் எல்லார் கையிலும் செல்போன் வந்தது போல, அலுமினியத்தில் வந்த பிறகு தான் எளியவர்கள் வீட்டில் இட்லிப்பானைகள் அடுப்பேறின. 

உணவகங்களில் இட்லிகள் தாராளம் 

அதன் பிறகு பிரச்சனை ஆட்டு உரல். இட்லிபானை வந்துவிட்டது உரலுக்கு எங்கே போவது? கிராமங்களில் ஊர் பொது உரல்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு வீடும் முறை போட்டு ஆட்ட வேண்டும். இத்தகைய பிரச்சனைகளால் இட்லி ஆண்டுக்கு ரெண்டு அல்லது மூன்று முறை வீட்டில் செய்யும் உணவாக இருந்தது.

பெரிய உரல்கள் தான் முதலில் வந்தன அவ்வளவு பெரிய உரலை வீட்டில் வைக்க இடம் கிடையாது அதனாலேயே  இட்லி அன்று மிகக் காஸ்ட்லியானதாக பார்க்கப்பட்டது. ஓட்டல் கடைகள் வந்த பின்பு இட்லிகள் சற்று தாரளமாகக் கிடைக்க ஆரம்பித்தது. 

குட்டிக் குட்டி ஆட்டுரல்கள் வந்த பின்பே நகரங்களில் சாதாரண வீடுகளில் இட்லி நுழைந்தது கிராமங்களில் அது கொஞ்சம் தாமதமாகத் தான் நுழைந்தன. டவுனுக்கு போனா நல்ல ஓட்டலில் இட்லி சாப்பிடணும் என்பது அன்றைய கிராமத்தார்களின் முதல் ஆசையாக இருந்தது. 

நகர்ப்புறங்களில் கூலித் தொழிலாளிகள், சுமை தூக்குவோர், மார்க்கெட் பகுதி, துறைமுகப் பணியாளர்கள் புழங்கும் பகுதி இங்கெல்லாம் சாலையோர இட்லிக் கடைகள் துவங்கின. இவை பெரும்பாலும் பெண்கள் நடத்தும் இட்லிக் கடைகள். தமிழகத்தில் தாலியிழந்தப் பெண்களுக்கு.அதுதானே தாசில் உத்யோகம் என இட்லிக் கடையைப் பற்றி பராசக்தியில் வசனம் எழுதினார் கலைஞர். 

4000 காம்போக்களில் சைட்டிஷ்

ஒரு காலத்தில் காஸ்ட்லியாக இருந்த இட்லி, எளிய உணவாகவும், குறைந்த விலையிலும் கிடைக்க ஆரம்பிக்க தமிழகத்தின் அடையாளம் ஆகிப் போனது. இந்த இட்லிக்கு மட்டும் தொட்டுக் கொள்ள என்றால் 4000 வகைகளில் காம்போக்கள் உண்டு எண்களில் 9ஐ பொதுக்குத்தல் எண் என்பார்கள் அதோடு எந்த எண்ணை கூட்டினாலும் அதே எண் வருவது போல இட்லியை மட்டுமே அதிக சைட்டிஷ்களுக்கு தொட்டுக் கொள்ள முடியும். 

செல்வந்தர்கள்  வீட்டில் மட்டும் இருந்த இட்லி.. எளிய உணவானதற்கு பின்பு அது அடைந்த வளர்ச்சி அசுரத்தனமானது. உலகில் எந்த மூலையிலும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தமிழக உணவு கிடைக்கும். கடைகளில் இட்லி இல்லாமல் இருக்காது, அப்படி இருந்தால் அக்கடை முழுமையடையாது. சங்கத் தமிழ் வளர்த்த மதுரையிலும், கொங்கு தமிழ் கொஞ்சும் கோவையிலும் இட்லி சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்ட செல்லப் பிள்ளையானது. இந்த 2 ஊர்கள் தான் இட்லியை சிம்மாசனம் ஏற்றியவை. 

Must Read: “மீன் அசைவம் என்று சொல்வதால், அதில் உள்ள சத்துகளை பலர் அறிவதில்லை…”

இட்லிக்கு இணையாக தேங்காய் சட்னி என்ற ஒன்றே அமிழ்தமாக இருந்த போதும். தக்காளி, புதினா, மல்லி, எள்ளு, மிளகாய், இஞ்சி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, பருப்பு, காரட், கறிவேப்பிலை, குடை மிளகாய் இப்படி தசாவதாரத்தை விட அதிக அவதாரங்களில் சட்னியைக் கண்டு பிடித்தது தமிழக சிட்னியான மதுரையே என்றால், தொழில் நுட்பத்தில் ஒரே ஈடில் 1000 இட்லிகள் வார்க்கும் மிஷின்களை உருவாக்கித் தந்தது கோவை. 

வகை, வகையான இட்லிகள் 

இன்றைய பெரிய ஓட்டல்களின் ஹைடெக் கிச்சன்களில் கோவையின் கண்டுபிடிப்பான இட்லி வார்க்கும் இயந்திரங்களே உலகம் முழுவதும் இருக்கின்றன.  எனக்குத் தெரிந்து இட்லிகளில் மட்டும் 250 வகையான இட்லிகள் இருக்கின்றன. 

துபாயில் வசிக்கும் என் நண்பன் மாறன் தற்போது 400 வகை இட்லிகளை தயாரிக்கும் முறையை கைவசம் வைத்துள்ளான்! அவனது கனவு என்ன தெரியுமா? KFC போல இட்லிக்கென்றே பிரத்யேகக் கடைகள் துவங்க வேண்டும் என்பதே..

மாப்ள நம்ம உடலுக்கு அவ்வளவு ஆரோக்யம் தராத ஒரு கோழியை பெருமையா பேசி ஃபில்டப் கொடுத்து அமெரிக்காகாரன் KFCன்னு நம்ம ஊரில் வந்து கடை போடும் போது, உண்மையில் ஆரோக்யமான நம்ம இட்லியை ஏன் நாம உலகம் முழுவதும் தரக்கூடாது என்பது அவன் வாதம்.

இதற்காக ஸ்பானிஷ் லெபனான், இத்தாலி, சைனா ஆகிய ஊர்களின் சுவைக்கேற்ப எந்த காம்போவில் இட்லி தந்தால் அதை அவர்கள் உண்ணுவார்கள் என்ற ஆராய்ச்சியில் நானும் அவனும் 2015 முதலே ஈடுபட்டு உலகளவில் மிகப் பெரிய அளவில் இட்லிக்கான ஒரு துவக்கத்தை தரும் முயற்சிகளில் இறங்கி கிட்டத்தட்ட 75% அது இறுதியாகிவிட்டது. 

வெளிமாநில சைட்டிஷ்களும் பொருத்தம்

இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ வல்லரசுகள் பலவற்றில் நம் தமிழக உணவான இட்லி வலம் வரப்போகிறது. அட இட்லிக்கேற்ற காம்போக்களை பற்றி சொல்ல வந்து பதிவை கொஞ்சம் திசை திருப்பினாலும் நீண்டு விடுகிறது பாருங்கள்.

இட்லிக்கு விதம் விதமான சட்னிகள்

தமிழகத்தின் இட்லிக்கு பஞ்சாபி, கேரளா, ஆந்திரா, ம.பி, இராஜஸ்தான்,கர்நாடகா, மகாரஷ்டிரா, போன்ற பல மாநிலங்களின் சைட்டிஷ்சும், கோபால் பல் பொடி AD போல. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வங்கதேசம், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் சைட்டிஷ்சும் அருமையாக இருக்கும்.

இட்லிக்கு முதலில் சைவத்தில் இருந்து வருவோம். இட்லிக்கு சாம்பார் என்பது பிரம்மன் எழுதிய விதி போன்றது. இட்லி சாம்பார் தான் உலகளவில் தமிழர்களின் உணவு அடையாளம். சாம்பாரில் துவரம் பருப்பு சாம்பார், தக்காளி சாம்பார், அரைத்துவிட்ட சாம்பார் வெங்காய சாம்பார் என பல வகைகள் உண்டு.

சென்னை ரத்னா கஃபே சாம்பாரை உண்டு வாழ்ந்தவர்கள், கும்பகோணம் இராயர் மெஸ் சாம்பார், மதுரையின் ஆரியபவன் சாம்பார், கோவை அன்னப்பூர்ணா சாம்பார், சேலம் வில்வாத்ரிபவன் சாம்பார் இப்படி சாம்பார் சாம்ராஜ்யத்தில் போஷாக்கான இளவரசனாக இருந்தது இட்லி. 

நெய் இட்லி சாம்பார் அறிமுகம் 

சேலத்தில் முதன் முதலாக நெய் இட்லி சாம்பாரை அறிமுகப் படுத்தியது எங்கள் கடையான இராஜகணபதி ஸ்வீட்ஸ் தான் என்பதில் மிகப் பெருமை எங்கள் குடும்பத்துக்கு இன்றளவும் உண்டு.  இன்று இருப்பது போல கடலைமிட்டாய் சைசில் மினி இட்லிகள் எல்லாம் இல்லை நல்ல பெரிய இட்லியே 2 வைத்து சாம்பாரும் நெய்யும் சேர்த்துத் தரும் கலை அது.

அட போய்யா இட்லி மேல சாம்பார், அதுமேல நெய், இதென்ன பிரமாதம் என்கிற சாருக்கு ஒரு ஊத்தப்பம் மாதிரி ஆட்களுக்கு அது ஒரு கலை என்பதை இங்கு விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் கடையில் அப்போதே 2நெய் இட்லிக்கென்றே பிரத்யேக கிண்ணம் போன்ற சிறிய தட்டு இருக்கிறது.

அதில்2 இட்லியை அப்படியே கொதிக்கக் கொதிக்க இட்லித் துணியில் இருந்து நேராக டிரான்ஸ்பர் செய்து அதன் தலையில் சூடான சாம்பாரை அபிஷேகம் போல ஊற்றி அத்திவரதரைப் போல இட்லியை சாம்பாரில் மூழ்கவிட்டு அதன் மேல் இராசிபுரம் நெய் இரண்டு கரண்டி ஊற்றி தருவார் அப்பா.

Must Read: தினமும் ஒருவேளை சிறுதானிய உணவு சாப்பிட அமைச்சர் அறிவுரை

அப்பப்பா.. சுவைப்பவரின் நாக்கில் அதன் ருசி உணர்ந்ததும்  2 நான்காகும், 4 எட்டாகும். எக்காரணம் கொண்டும் சூடு ஆறிய இட்லியில் நெய் இட்லி அப்பா தரவே மாட்டார்! கொதிக்க கொதிக்க இட்லி & சாம்பார் நெய் கூட கொஞ்சம் சூடாகவே இருக்கும். 

இதற்கு ஸ்பெஷல் சட்னி என்று மூன்று சட்னிகள் தேங்காய்/ புதினா/ தக்காளி என்று அது ஒரு பிளேட்டில் தனியாகத் தரப்படும்.. காலை 8 மணி முதல் 9:30 வரை மாலை 6 முதல் 8 வரை இதற்கு மேல் வந்தால் கடையில் சாம்பார் இட்லி கிடைக்காது. இந்த டிமாண்ட்டை உருவாக்கி வைத்தவர் அப்பா. 

ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான இட்லி சாம்பார் 

கடைக்கு போன் செய்து அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் செய்யும் அளவிற்கு அன்று அது இருந்தது. அடுத்து சென்னையின் ரத்னா கஃபே சாம்பார். திருவல்லிக்கேணியில் இருப்பதால் கேணி கேணியாக சாம்பார் தருவார்கள். பார்த்த சாரதி பெருமாளே புளியோதரையை மறந்துவிட்டு இங்கு வந்து சாப்பிடுவார் என்று சொன்னால் அப்படியே நம்பி விடலாம். அந்தளவுக்கு ஃபேமஸ் அவர்கள் சாம்பார்.

கும்பகோணம் இராயர் மெஸ்ஸில் கடப்பா, கொத்சு, தக்காளிச்சட்னி, மல்லிச் சட்னியுடன் தரும். இட்லிகளும் நாவூறவைக்கும் சுவையில் சூடாக கிடைக்கும்.. இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் இட்லியை சாம்பாருடன் தந்து வெற்றி பெற்றவர்கள் எல்லாரும் இட்லி & சாம்பார் இரண்டையும் சூடாகத் தந்தே இந்தப் புகழை அடைந்திருப்பர். 

கோவை அன்னபூர்ணா தான் சட்னி சாம்பார்களுடன் இட்லிப் பொடியை அறிமுகம் செய்தவர்கள். தமிழகத்தில் எல்லா ஊர்களிலுமே புகழ் பெற்ற இட்லிக்கடை (தை)கள் இருக்கும்.. மதுரை ஆரியபவனின் அரைத்துவிட்ட சாம்பாருக்கு வெறும் இட்லியும் சரி சாம்பார் இட்லியும் சரி பிரமாதமாக இருக்கும், 

இட்லிக்கு சட்னி பேமஸ் மதுரை 

மதுரையில் மட்டுமே சாலையோரக் கடைகள் எதிலும் இட்லியை மட்டும் நம்பி சாப்பிடலாம். எந்தக் கடைக்கு நீங்கள் போனாலும் மினிமம் 3 வித சட்னிகள் அன்றைய சீசனுக்கு விலை குறைந்த காய்கறியுடன் அபாரமாக ஒரு பருப்பு சாம்பாருடன் சுடச்சுட இட்லிகள் இலையில் விழும்.

8 சட்னிக் கடை போன்ற பிரத்யேக இட்லிக் கடைகளும் மதுரையில் உண்டு. 64 திருவிளையாடல்களில் 60 விளையாடல்களை சிவபெருமான் மதுரையில் நடத்தியது இந்த இட்லிக்காக கூட இருக்கலாம். இந்த ஊர் பிட்டுக்கே மண் சுமந்தவர் ஆயிற்றே. 

மதுரை மல்லிப்பூ இட்லி

செட்டிநாடு ஸ்டைலில் தக்காளி வதக்கல் சட்னி என்று ஒன்று வைப்பார்கள், சூடாக குழம்பு போலவே இருக்கும்.. சின்ன வெங்காயம் கத்திரிக்காயை குட்டி குட்டியாக சதுரமாக நறுக்கி அவர்கள் வைக்கும் கொத்சு சாம்பார் கொத்துமல்லி மணக்க இலையில் வைத்தால் வைத்த மறு நொடி காலியாகிவிடும். 

அதே போல நெல்லையின் தேங்காய்ப் பால் சொதியுடன் இட்லி நாகர்கோவிலின் ரச இட்லி போன்றவை இட்லிக்கு புகழ் சேர்ப்பவை. சென்னை விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகில் உள்ள ஹைவேஸ் இன்னில் இன்றும் அபாரமான சாம்பார் இட்லி கிடைக்கும்.

இட்லிக்கு என தனியாக ஒரு கடை 

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் சுவையான சட்னி, சாம்பார், கொத்சு, கடப்பாவுடன் இட்லி கடைகள் பல இருந்தன சில இன்றும் இருக்கின்றன. இப்போது ஃப்ரைடு, சில்லி, பீட்ஸா போன்ற இட்லிகளும் வந்துவிட்டன. 

சென்னையில் தற்போது வெற்றிகரமாக இயங்கும் எங்கள் குடும்ப நண்பரின் கடையான இட்லீஸ் துவங்கிய 3 ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்துள்ளது. பொடி இட்லி, பூண்டுக் குழம்பு இட்லி, தயிர் இட்லி, பொடிஸா, என பட்டையைக் கிளப்பும் பல இட்லி வகைகளை அறிமுகம் செய்து புகழ் பெற்றுள்ளது. 

தற்போது தி.நகர் பசுல்லா ரோட்டில் ஹவுஸ் ஆஃப் இட்லீஸ் என விரிவாக்கப்பட்டுள்ளது.இதை ஏன் சொல்றேன்னா இட்லியை மட்டும் சரியான பக்குவத்தில் சூடாக சுவையாக தரமாக தந்துவிட்டால் தமிழகத்தில் யாரும் ஜெயிக்கலாம்.

இட்லிக்கு அசைவ குழம்பு டாப் 

இனி அசைவம். இட்லி என்றதும் குடல் குழம்புன்னு தான் முதலில் ஞாபகம் வரும் அது ரகளையான காம்போ. இதே போல ஈரல் குழம்பும் அதே லெவல் காம்போவாகும் மட்டன் குழம்புன்னு வரும் போது கறிக் குழம்பை விட நெஞ்சு சாப்ஸ் குழம்பு தான் பெஸ்ட்.

சிக்கனில் நாட்டுக்கோழி குழம்பு தான் சரியான சாய்ஸ் இட்லி & மீன் குழம்பு அன்றைய கார்த்திக்-ராதா ஜோடியைப் போல பிரத்யேகமாக இருக்கும். அதிலும் கடல் மீன்களை விட ஆற்று மீன் குழம்புகள் சுவையில் அள்ளும். பூண்டு அல்லது மாங்காய் போட்டு வைத்த மீன்குழம்பை மறுநாள் காலையில் சூடான இட்லியுடன் சாப்பிடுவதே சொர்க்கம் எனலாம்.

Must Read: பெங்களூருவில் நல்ல தரமான வெஜ் டிபன் எங்கு சாப்பிடலாம் தெரியுமா?

அசைவ குருமா வகைகளும் இட்லிக்கு நல்ல காம்போதான். மீன் குழம்புகள் மட்டுமே சைவ புளிக்குழம்புகளை நினைவூட்டும். இலங்கையின் வரட்டல் தூள் கறி, இறால் குழம்பு, நண்டுக் குழம்பு, சிக்கன் உருளைக் குழம்பு வங்கதேசத்தின்/ முண்டா கபாப் க்ரேவி பாகிஸ்தானின் தால் வகைகள் இவையெல்லாம் பிற நாடுகளின் இட்லித் தோழமைகள். லெபனான் உணவான ஹம்மஸ்..ஃபிஷ் ஃபெல்லட் கறி சாப்பிட்டு பார்க்கவேண்டும்.

ஷெசல்ஸ், மொரீஷியஸ் தீவுகளில் வசிக்கும் தமிழர்கள் வீட்டில் கணவாய்& ஆக்டோபஸ் க்ரேவியுடன் இட்லியை ருசிக்கலாம். பஞ்சாபிய உணவுகளில் பல க்ரேவிக்கள் இட்லிக்கு நல்ல சைட்டிஷ்ஷாக இருக்கும். ஃப்ரைடு இட்லி, சில்லி இட்லியுடன் கொஞ்சம் இளம் ஆட்டுக் கறியை சேர்த்து செய்த மட்டன் ஃப்ரை இட்லியை..சமீபத்தில் பெங்களூருவில் சுவைத்தேன். 

கர்நாடகாவை பொறுத்தவரை அந்த சாம்பாரின் இனிப்பை மட்டும் பொறுத்துக் கொண்டால் தட்டு இட்லி, ரவா இட்லி, போன்றவை பட்டையை கிளப்பும் சுவையிலிருக்கும் ஆந்திரா காரத்திற்கு இட்லி ஒரு சரியான ஸ்பீட் பிரேக்கர். ஆந்திர குழம்புகள் அனைத்துமே இட்லிக்கு சூப்பராக இருக்கும். நெல்லூர் மீன் கத்திரிக்காய் குழம்போடு இட்லி சாப்பிட்டிருந்தா உங்களுக்கே தெரியும். 

சேட்டன்கள் தேசத்தில் இட்லிக்கு ஃபீப் வைத்து சாப்பிடும் வழக்கமுண்டு கேரள/தமிழக எல்லைகளைத் தாண்டி இட்லியை விட புட்டும், பரோட்டாவும், ஆப்பமும் தான் கிடைக்கும். இட்லி கேரளாவில் எளிதில் கிட்டா உணவு. 

இட்லிக்கு பொருத்தமான சால்னா 

மதுரை செல்லூரில் பச்சைக்கறி குழம்பு என்னும் பச்சை நிறச் சால்னா வெகு பிரபலம்.அதேபோல முதலியார் இட்லிக் கடையில் முட்டை ஃப்ரை இட்லி, சிக்கன் கறி இட்லி, குடல் இட்லி ஃப்ரை போன்றவை பிரபலம்! பல ஊர்களில் இட்லிக்கு சால்னா தரும் கடைகள் ஃபேமஸாக இருக்கும் மதுரையிலேயே அது போல கடைகளுக்கு ஒரு டைரக்டரியே போடலாம்..

சூடா நாலு இட்லி அப்படியே ஒரு வடியல் அல்லது ஆஃப்பாயில்னு 50 ரூபாய்க்கு அருமையாக இக்கடைகளில் சாப்பிட்டு விடலாம். ஒரு சில வீடுகளில் அவரவர் அம்மாக்கள் இட்லிக்கு தொட்டுக் கொள்ளச் செய்யும் பிரத்யேக மெனுக்களை எல்லாம் கணக்கில் கொண்டு வந்தால் இட்லிக்கு 40ஆயிரம் காம்போக்கள் கூட வரலாம். இட்லியைப் பற்றி எழுத உட்கார்ந்த போது இவ்வளவுத் தகவல்களை எழுதப்போகிறோம் என்பதை எல்லாம் நான் யோசிக்கவில்லை. இட்லி நடிகர் வடிவேலு போல. 

இக்கால இளசுகளின் விருப்ப ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், சாட் அயிட்டங்கள் எத்தனை வந்து இன்று சக்கை போடு போட்டாலும் காமெடியில் வடிவேலுவின் இடம் போல இட்லிக்கான மவுசு இன்னும் அப்படியே இருக்கிறது. பாத்திரத் தயாரிப்பாளர்கள் கூட ஹார்ட், டைமண்ட், ஸ்டார் முதலிய அச்சுகளில் இட்லி தட்டுகள் செய்து விற்பதிலேயே தெரிகிறது. “இட்லி தான் தமிழக உணவுகளின் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்று”

-கட்டுரை நன்றி; திரு.வெங்கடேஷ் ஆறுமுகம் 

#historyofidli #southindianfood #indianfood #maduraiidli #idli 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments